HOME ARTICLES HISTORY MARTYRS PHOTOS LINKS ARCHIVES CONTACT  

 

 


 

10-11-2008, 10.20PM

அனாதரவாக காணப்பட்ட பொதியிலிருந்து கிரனைட் மீட்பு.

வெலிக்கடைப் பொலிஸ் நிலையத்திற்கு சமீபமாக அனாதரவாக காணப்பட்ட பொதியொன்றிலிருந்து 2 கிரனைட் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி.ரஞ்சித்குணசேகர தெரிவித்துள்ளார். இன்று (10.11.2008) காலை சிவிலியன்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் இவை மீட்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக பாராளுமன்ற வீதியில் நெருக்கடி நிலை காணப்பட்டதாகவும் தற்போது நிலைமை வழமைக்கு திரும்பியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

10-11-2008, 10.17PM

மேலும் 10 பேர் அகதிகளாக தமிழகம் சென்றுள்ளனர்.

புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமான கிளிநொச்சியிலிருந்து 3 குடும்பங்களைச் சேர்ந்த 10 பேர் நேற்று (09.11.2008) தமிழகத்திற்கு அகதிகளாக சென்று சேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்களில் 4 பெண்களும், ஒரு குழந்தையும் அடங்குவதாக தமிழக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விசாரணைகளின் பின்னர் மண்டபம் அகதிகள் முகாமில் இவர்களை தங்கவைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

10-11-2008, 10.09PM

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டம்.

கொழும்பு மகசீன் சிறைச்சாலை மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் இன்று (10.11.2008) உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றினை நடாத்தியுள்ளனர். போராட்டத்திலீடுபட்ட அரசியல் கைதிகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமது உறவினர்கள் தம்மை பார்வையிடுவதற்கும், உணவு உள்ளிட்ட ஏனைய பொருட்களை வழங்குவதற்கும் இலகுவாக தத்தமது மாவட்ட சிறைச்சாலைகளில் தாம் தடுத்து வைக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையினையும், தம்மீதான வழக்குகள் துரித கதியில் விசாரிக்கப்பட்டு தமக்கான தீர்ப்புக்கள் உரிய முறையில் வழங்கப்படவேண்டும் என்பதனையும் போராட்டத்திலீடுபட்டுள்ள அரசியல் கைதிகள் வலியுறுத்தியதாக பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். மேலும் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய கைதிகளுடன் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்படுவது தவறு என்றும் அது தொடர்பில் நீதித்துறை அமைச்சருடன் தாம் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

10-11-2008, 7.50PM

500 மெற்றித் தொன் பொருட்கள் வன்னிக்கு அனுப்பிவைப்பு.

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலிருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களுக்காக மேலும் 36 லொறிகளில் உணவுப் பொருட்கள் இன்று (10.11.2008) அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பி.எம்.எஸ்.சாள்ஸ் தெரிவித்துள்ளார். வவுனியா தேக்கங்காடு களஞ்சியத்திலிருந்து 500 மெற்றித் தொன் பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

10-11-2008, 7.38PM

கிரான்சி, வெத்தாவில் பிரதேசங்கள் இராணுவத்தினர் வசம்.

வன்னி மீட்பு இராணுவ நடவடிக்கையினை மேற்கொண்டுள்ள படையினர் கிளிநொச்சி கிரான்சி, வெத்தாவில் பகுதிகளை தமது முழுமையான கட்டுப்பாட்டிற்குள் நேற்று (09.11.2008) கொண்டுவந்திருப்பதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பிரிகேடியர் சவேந்திரசில்வா தலைமையில் செயற்படும் 58 படைபிரிவினரே குறித்த பகுதியை மீட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பூநகரி – பரந்தன் வீதியை திறப்பதை இலக்காக கொண்டு இராணுவத்தினர் தமது தாக்குதல்களை நடாத்திவருவதாக தெரியவருகின்றது.

10-11-2008, 7.07PM

புலிகள் அமைப்புடன் எவ்வித உடன்படிக்கையும் அரசாங்கம் மேற்கொள்ளாது - அமைச்சர் மைதிரிபால சிறிசேன

பாராளுமன்றத்தில் இன்று (10.11.2008) உரையாற்றிய அமைச்சர் மைதிரிபால சிறிசேன ஆயுத நடவடிக்கைகளை கைவிட்டு ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு அரசாங்கம் புலிகள் அமைப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதற்கு மாறாக அந்த அமைப்புடன் எவ்வித போர் நிறுத்த உடன்படிக்கையினையும் தற்போதய அரசாங்கம் மேற்கொள்ளாது என்பதனை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்வதாக அவர் கூறியுள்ளார்.

10-11-2008, 6.41PM
யுத்த நிறுத்தம் கிழக்கில் அழிவுக்கு வழிவகுக்கும் -சந்திரகாந்தன்.

வேறோர் தரப்பின் நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் யுத்த நிறுத்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டால் அது பாரிய அழிவுக்கு வளிவகுக்கும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். கல்முனையில் இடம்பெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும்போது இதனைத் தெரிவித்துள்ளார். இந்தியாவின் நிர்ப்பந்தத்தினால் இலங்கையில் போர் நிறுத்தம் ஒன்று ஏற்படவாய்ப்புள்ளதாக பரவலாக பேசப்படுகின்றது. இவ்வாறானதொரு போர் நிறுத்தம் கிழக்கில் அபிவிருத்தியினை ஸ்தம்பிதம் அடையச் செய்து பயங்கரமான சூழ்நிலையை தோற்றுவிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

10-11-2008, 3.55PM

ஆயுதங்களைப் போட்டுவிட்டு அமைதிப் பேச்சு வார்த்தைக்கு புலிகள் திரும்பலாம் - அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல

 

புலிகள் அமைப்பு விரும்பினால் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சமாதானப் பேச்சு வார்த்தைக்கு திரும்பலாம் என பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். புலிகள் அமைப்பின் முக்கியஸ்தர் பா.நடேசன் இணையத்தளம் ஒன்றில் தெரிவித்துள்ள கருத்துக்கள் தொடர்பாக ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும்போது இவ்வாறு தெரிவித்துள்ளார். புலிகளின் போர் நிறுத்தம் தொடர்பில் இலங்கை மக்கள் ஏற்கனவே பல அனுபவங்களைப் பெற்றுள்ளனர். எனவே ஆயுதங்களைப் போட்டுவிட்டு புலிகள் போர் நிறுத்தம் ஒன்றினை அறிவிக்கும் பட்சத்தில் அது தொடர்பில் தீர்மானிக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
 

10-11-2008, 3.11PM

ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ இன்று இந்தியா பயணம்.

இந்தியத் தலைநகர் புதுடில்லியில் நாளை ஆரம்பமாகவுள்ள வங்காள விரிகுடா நாடுகளின் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ இன்று (10.11.2008) இந்தியா செல்லவுள்ளார். இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ளும் இம்மாநாட்டில் உரையாற்றும் ஜனாதிபதி இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்ட இந்தியாவின் பல அதிகாரிகளுடன் இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பான பேச்சு வார்த்தையினை மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

10-11-2008, 2.50PM

இ.போ.ச பஸ் கட்டணங்கள் நாளை முதல் குறைவுள்ளன.

அரச போக்குவரத்து பஸ் கட்டணங்களை நாளை முதல் குறைப்பதற்கு போக்கு வரத்து அமைச்சு தீர்மானித்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. 7 ரூபா முதல் 10 ரூபா வரையான கட்டணம் ஒரு ரூபாவினாலும் 14-20 ரூபா வரையான பஸ் கட்டணம் 2 ரூபாவினாலும் 23-28 வரையான கட்டணம் 3 ரூபாவாலும் 30-44 வரையான கட்டணங்கள் 4 ரூபாவாலும் 46-50 வரையான கட்டணம் 5 ரூபாவாலும் 52-69 ரூபா வரையான பஸ் கட்டணம் 6 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10-11-2008, 11.18AM

யாழ் நாயன்மார்கட்டில் இளம் பெண் சுட்டுக்கொலை.

யாழ்ப்பாணம் நல்லூர் நாயன்மார்கட்டுப் பகுதியில் நேற்று (09.11.2008) அடையாளம் தெரியாத ஆயுததாரிகளினால் இளம் பெண் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் உயிரிழந்தவர் துன்னாலை தெற்கு கரவெட்டியைச் சேர்ந்த 28 வயதுடைய சிறிரங்கன் சுமதி என அடையாளம் காணப்பட்டுள்ளார். சடலம் யாழ் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

10-11-2008, 10.55AM

ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக ஊழியர்கள் இருவர் கைது.

கொழும்பு ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக ஊழியர்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி.ரஞ்சித்குணசேக தெரிவித்துள்ளார். சட்டவிரோதமாக போலியான ஆவணங்களையும், சான்றிதழ்களையும் தயாரித்து மாணவர்களுக்கு வழங்கிவந்தார்கள் என்ற குற்றச் சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டு தொடர்ந்தும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

10-11-2008, 10.36PAM

இராமேஸ்வரம் மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு.

இலங்கை இந்திய கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. நேற்று முன்தினம் (09.11.2008) இந்தச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாகவும் இதில் நான்கு மீனவர்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரியவருகின்றது. இத்தாக்குதல் இலங்கைக் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளதாகவும் இதனால் இராமேஸ்வரம் பகுதியில் பதற்றம் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

10-11-2008, 10.02AM

வவுனியாவில் குண்டு வெடிப்பில் ஒருவர் உயிரிழந்தார்.

 

வவுனியா தோணிக்கல் பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்வி நிறுவனம் ஒன்றினுள் கடந்த சனிக்கிழமை (08.11.2008) இரவு 10 மணியளவில் இடம் பெற்ற குண்டு வெடிப்பில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

 

குண்டு வெடிப்பில் இறந்தவரின் சடலத்தினை அடிப்படையாக கொண்டு இவர் குண்டினைப் பொருத்தியவேளையில் தவறுதலாக குண்டு வெடித்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். உயிரிழந்தவர் அரச திணைக்களம் ஒன்றில் சாரதியாக பணிபுரிபவர் எனவும் அண்மையிலேயே முல்லைத்தீவிலிருந்து இடமாற்றம் பெற்று வவுனியாவிற்கு வந்தாகவும் தெரியவருகின்றது.

 

10-11-2008, 9.37AM

ஒரு தரப்பு யுத்த நிறுத்தத்தினை அறிவிப்பதன் மூலம் அமைதியை ஏற்படுத்த முடியாது - முதல்வர் கருணாநிதி.

ஒரு தரப்பு யுத்த நிறுத்தத்தினை அறிவிப்பதன் மூலம் அமைதியை ஏற்படுத்திவிட முடியாது மாறாக இரு தரப்பினரும் யுத்த நிறுத்தத்தினை பிரகடனப்படுத்தி சமாதானப் பேச்சு வார்த்தையின் மூலம் தீர்வொன்றைக் காண முயலவேண்டும் என தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
தி.மு.க அண்ணா அறிவாலயத்தில் நேற்று (09.11.2008) நடைபெற்ற திருமண வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்துள்ளார். போரில் ஈடுபட்டுள்ள இரு தரப்பினரும் சம்மதித்தால் மட்டுமே யுத்த நிறுத்தமும், பேச்சு வார்த்தையும் சாத்;தியமாகும். இரு தரப்பினரும் யுத்த நிறுத்தம் மேற்கொள்வது குறித்து பேச முன்வரவேண்டும். மாப்பிள்ளையும் பெண்ணும் மாலை மாற்றினால் திருமணம் முழுமைபெறும் அதேபோல் இலங்கையில் போர் நிறுத்தத்தினை சம்பந்தப்பட்ட இரு தரப்பினரும் அறிக்கவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

10-11-2008, 09.13AM

அனைத்து இனங்களும் சம உரிமையுடன் வாழ்வதற்கான சூழலை உருவாக்க முயல்வதாக ஜனாதிபதி தெரிவிப்பு.

மனிதாபிமான இராணுவ நடவடிக்கை பயங்கரவாதிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்றதே தவிர வேறு எந்த இனத்திற்கும் எதிராக முன்னெடுக்கப்படவில்லை என ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அனைத்து இனங்களும் சமஉரிமையுடன் வாழ்வதற்கான சூழலை உருவாக்குவதற்கான முயற்சியினை தாம் மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டுள்ள அவர் நீதியான சமுதாயத்தினை உருவாக்குவதே தமது அரசாங்கத்தின் நோக்கம் எனத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதிச் செயலகத்தில் நேற்று (09.11.2008) சமயத் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடியபோது அவர் இவற்றினைத் தெரிவித்துள்ளார். நாட்டில் சமாதானம் மலர மதத் தலைவர்களின் ஒத்துழைப்பு அவசியம். எனவே அதற்காக அனைத்து சமயத் தலைவர்களும் பாடுபடவேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்

09-11-2008, 10.05PM

இலங்கைத் தமிழர் நிவாரண நிதியத்திற்கு தமிழக காங்கிரஸ் கட்சி 5 இலட்சம் வழங்கியுள்ளது - தங்கபாலு

தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் தங்கபாலு மற்றும் சுதர்சனன் ஆகியோர் தமிழக முதல்வர் மு.கருணாநிதியை இன்று (09.11.2008) அவரது இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். இதன்போது இலங்கைத் தமிழ் மக்களின் நிவாரணத்திற்காக காங்கிரஸ் கட்சியின் சார்பில் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான காசோலையினை முதல்வரிடம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர் ராஜீவ்காந்திக்கும் ஜேர்.ஆர்.ஜெயவர்த்தனவிற்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையினை அமுல் படுத்துவதன் மூலமே இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்று தெரிவித்துள்ளார். மேலும் இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கான நிவாரண உதவிகள் செஞ்சிலுவைச் சங்கம், ஐ.நா நிறுவனம் ஆகியவற்றின் ஊடாக வினியோகிப்பதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். நிவாரண நடவடிக்கைகள் சரிவர இடம் பெறுகின்றனவா என்பது குறித்து கொழும்பிலுள்ள இந்திய தூதரகம் ஆராயும் எனத் தெரிவித்துள்ள அவர் பேச்சு வார்த்தையொன்றின் மூலமே இலங்கையின் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

09-11-2008, 9.16PM

மேலும் 7 பேர் அகதிகளாக தமிழகம் சென்றடைந்துள்ளனர்.

மன்னாரிலிருந்து இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 7 பேர் அகதிகளாக தமிழகத்தின் அரிச்சல்முனைப் பகுதியை நேற்றயதினம் (08.11.2008) சென்றடைந்துள்ளதாக தமிழப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிளாஸ்டிக் படகில் சென்ற இவர்களை அரிச்சல்முனைப் பொலிஸார் கைது செய்து விசாரணையின் பின்னர் மண்டபம் அகதிகள் முகாமிற்கு அனுப்பிவைத்துள்ளனர்.

 

09-11-2008, 8.01PM

புலிகளின் இனங்காணப்பட்ட இலக்கு மீது விமானத் தாக்குதல்.

கிளிநொச்சி பரந்தனுக்கு கிழக்கே ஒரு கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள புலிகளின் முகாம் ஒன்றின் மீது ஜெட் விமானங்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக விமானப்படைப் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனகநாணயக்கார தெரிவித்துள்ளார். நண்பகல் 12.50 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதல் வெற்றியளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

09-11-2008, 6.01PM

அமைதிப் பேச்சு வார்த்தைக்கு தயார் என புலிகள் அமைப்பு பகிரங்கமாக அறிவிக்கவேண்டும் - த.பாண்டியன்.

 

இந்திய மத்திய அரசும், தமிழக முதல்வரும் அரசாங்கத்திடம் மட்டும் போர் நிறுத்தம் செய்யுமாறு வலியுறுத்துவது இலங்கையில் அமைதியான போர் நிறுத்தம் ஒன்று ஏற்பட வளிவகை செய்யாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் த.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

 

போரை நிறுத்துமாறு ஒரு தரப்பினருக்கு மாத்திரம் அழுத்தம் கொடுக்க முடியாது என தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி தெரிவித்துள்ளதனை சுட்டிக்காட்டிய அவர் புலிகள் தாக்குதல்களை நிறுத்தி பேச்சு வார்த்தை மூலமாக அமைதி வழியில் தீர்வு காண்பதற்கு தாம் தயார் என்பதனை அறிவிக்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை நிறுத்துமாறு இந்திய மக்களும் தமிழ் நாட்டிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் முன்வந்து கோரிக்கை விடுத்துள்ளமையை பொதுவாக பலரும் ஆதரித்துள்ளனர். இதன் பின்னணியில் இலங்கை அரசை மாத்திரம் யுத்த நிறுத்தம் செய்யுமாறு முதல்வரும் மத்திய அரசும் கோருவது எவ்வாறு சாத்தியப்படும் என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

 

09-11-2008, 5.40PM

தமிழர் விடுதலை கூட்டணி அலுவலகத்தில் கூட்டம்

தலைவர் வீ.ஆனந்தசங்கரி அவர்கள் பங்கேற்பு

 

 

 

 

யாழ் குடாநாட்டுக்கு விஜயம் செய்திருக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் திரு.வீ.ஆனந்தசங்கரி அவர்கள் இன்று (கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு யாழ் குடாநாட்டு மக்களுக்கு தனது அரசியல் நிலைப்பாட்டை விளக்கினார். ஈழம் என்பது சாத்தியமாகாது எனவும், இந்தியா ஒரு போதும் அதற்கு ஒத்தாசையாக இராது எனவும் தெரிவித்த திரு. ஆனந்தசங்கரி இந்திய மாதிரியிலான ஒரு தீர்வு சாத்தியம் எனவும் அதற்கு ஜனாதிபதியையும் உடன்பட வைக்க முடியும், மதகுருமார் உட்பட பல்வேறு தரப்பினரதும் ஆதரவையும் பெற முடியும் எனவும் நம்பிக்கை வெளியிட்டார். இங்கு இடம்பெறும் கொலைகள், கடத்தல்கள், களவுகளால் நீங்கள் துயரடைந்திருப்பது தெரியும், இந்த சம்பவங்களுக்கு காரணமானவர்கள் யார் என்பதை சம்பவம் நடைபெறும் இடத்திலுள்ளவர்கள் நிச்சயம் அறிந்திருப்பார்கள் எனவே யாருக்கும் அச்சப்படாமல் இவற்றுக்கு காரணமானவர்களை நீங்கள் என்னிடம் தெரிவிக்கலாம் நான் அவற்றுக்கு தீர்வுகாண என்னாலான அனைத்தையும் செய்வேன் எனவும் ஒரு போதும் எனது பணியைவிட்டு ஒதுங்கமாட்டேன். நான் தொடர்ந்தும் உங்களுடன் இருப்பேன் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார். யாழ் குடாநாட்டு பத்திரிகைகள் தனது கருத்துக்களை பிரசுரிப்பதில்லை எனதெரிவித்த அவர் தனது யாழ் விஜயம் குறித்து யாழ்ப்பாண பத்திரிகைகள் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தவில்லை என்றும் குறிப்பிட்டார். பத்திரிகையை காசுகொடுத்து வாங்கும் மக்களுக்கு தகவல் வழங்க தவறிவிட்டீர்கள் எனவும் சுட்டிக்காட்டினார்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் யாழ் மாவட்ட செயலாளர் சங்கையா தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் ஈபிஆர்எல்எவ் யாழ் பிராந்திய செயாலாளர் மோகன், முன்னாள் யாழ் மேயர் கந்தையா, கிராமஉத்தியோகத்தர் சிவகுலசிங்கம், திருமதி ஸ்ரீபாஸ்கரன், முன்னாள் கிராம சபை தலைவர் முத்துலிங்கம், ஆகியோரும் தமது கருத்துக்களை தெரிவித்தனர். பிற்பகல் 2 மணிவரை நடைபெற்ற இக் கூட்டத்தில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர் பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்;காக தங்களை மன்னிக்குமாறு கட்சி அமைப்பாளர் சங்கையா பலமுறை கூட்டத்திற்கு வருகை தந்திருந்தவர்களை கேட்டுக்கொண்டார்.

 

09-11-2008, 3.01PM

திருகோணமலையில் 16 பேர் காணாமல் போயுள்ளனர்.

திருகோணமலையில் கடந்த இரு மாதங்களில் 16 பேர் காணாமல் போயுள்ளதுடன் மேலும் 16 பேர் கடத்தப்பட்டுள்ளதாக முறைப்பாடு கிடைத்துள்ளது என மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த செப்டம்பர் மாதம் 8 பேர் காணாமல் போயும் 3 பேர் கடத்தப்பட்டும் 9 பேர் கைது செய்யப்பட்டும் உள்ளனர். ஒக்டோபர் மாதம் 8 பேர் காணாமல் போயும், 13 பேர் கடத்தப்பட்டும் உள்ளனர். 29 பேர் பல்வேறு சந்தர்ப்பங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

09-11-2008, 01.08PM

ஏ32 வீதி ஓரிரு தினங்களில் திறக்கப்படும் - சரத்பொன்சேகா

ஏ32 பூநகரிப் பாதையினைத் திறப்பதற்கு இன்னும் ஒரு கிலோ மீற்றர் தூரத்தினை புலிகளிடமிருந்து மீட்கவேண்டியுள்ளதாகவும் எதிர்வரும் சில நாட்களில் பூநகரி பாதை திறக்கப்பட்டுவிடும் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜென்ரல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

குறித்த பாதையினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் இராணுவ நடவடிக்கை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர் ஓரிரு தினங்களில் அது நிறைவுக்கு வரும் எனக் குறிப்பிட்டுள்ளார். குறித்த வீதி திறக்கப்பட்டதும் யாழ்ப்பாணத்தில் பணியாற்றும் 43 ஆயிரம் படையினரும் விடுமுறையில் பஸ் வண்டிகளில் வீடுசென்று திரும்பமுடியும் அதேபோல் விமானங்கள் கப்பல்கள் விடுமுறையில் செல்வதனால் காலதாமதமும் செலவும் ஏற்படுவதனைச் சுட்டிக்காட்டியுள்ள இப்பாதை திறக்கப்படுவதன் மூலம் பிரயாண கஷ்டங்களை நிவர்த்தி செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளார்.

09-11-2008, 12.37PM
அரசியல் தீர்வுத்திட்டம் வெகுவிரைவில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் - பேராசிரியர் திஸ்ஸவிதாரண.

தேசிய இனப்பிரச்சினைத் தீர்விற்கான அரசியல் தீர்வுத்திட்டத்தினை தயாரித்து ஜனாதிபதியிடம் வெகுவிரைவில் ஒப்படைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக சர்வகட்சிக்குழுவின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸவிதாரண தெரிவித்துள்ளார். கடந்த வருடம் இரண்டு தடைவைகள் சர்வகட்சிக்குழுக் கூட்டம் நடைபெற்றுள்ளதாகவும் இதன்போது 90 வீதமான யோசனைகளுக்கு அனைத்துக் கட்சிகளும் இணக்கம் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதன் அடிப்படையில் தீர்வுத்திட்டம் தயாரிக்கும் பணியினை நிறைவு செய்யும் சூழ்நிலை காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

09-11-2008, 12.20PM
2 வருடத்தினுள் 15222 காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகள் கிடைத்துள்ளன - மகாநாம திலகரட்ண

கடந்த இரு வருடங்களில் 1100 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அவர்கள் தொடர்பான தகவல்கள் தெரியவரவில்லை என காணாமல் போனோர் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மேல் நீதிமன்ற நீதிபதி மஹாநாம திலகரட்ண தெரிவித்துள்ளார்.

இவர்களில் 334 பேர் கடத்தப்பட்டவர்கள் என்றும் 771 பேர் காணாமல் போனவர்கள் எனவும் தெரியவருகின்றது. மேலும் 543 விபரம் தெரியாத கொலைகள் குறித்தும் 308 அடையாளம் தெரியாத சடலங்கள் தொடர்பாகவும் தகவல் கிடைத்துள்ளது. 31.08.2008 ல் இருந்து 15222 பேர் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு கிடைத்தன இவர்களில் 14451 பேர் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர். 1138 பேர் கடத்தப்பட்டதாக முறைப்பாடு கிடைத்தது எனினும் பின்னர் 804 பேர் திரும்பிவந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

09-11-2008, 11.02AM

இனப்பிரச்சினைக்கான தீர்வை வலியுறுத்தி உண்ணாவிரதம்.

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வொன்றினைக் காணவேண்டும் என்பதனை வலியுறுத்தி சென்னையில் தொலைக்காட்சி நடிகர், நடிகைகள் இன்று (09.11.2008) உண்ணாவிரதப் போராட்டம் நடாத்துகின்றனர்.

சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகைக்கு அருகே காலை 9 மணி முதல் இப்போராட்டம் இடம் பெற்றுவருவதாகவும் மாலை 5 மணிக்கும் போராட்டம் முடிவடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தொலைக்காட்சி நாடக இயக்குனர்கள் நடிகர்கள் நடிகைகள் எழுத்தாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

09-11-2008, 1037AM

கிழக்கு மாகாணசபைக்கான அதிகாரங்கள் உரியமுறையில் வழங்கப்படவில்லை மாகாணசபை அமைச்சர் கிஸ்புல்லா

இனப்பிரச்சினைத் தீர்விற்காக 13வது அரசியல் அமைப்பினை முழுமையாக அமுல்படுத்தப் போவதாக அரசாங்கம் தெரிவித்து கிழக்கு மாகாணசபையை உருவாக்கியுள்ளபோதும் அதற்கான அதிகாரங்கள் ஏதும் உரியமுறையில் வழங்கப்படவில்லை என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஏ.எல்.எம்.கிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.

வீரகேசரிப் பத்திரிக்கைக்கு அவர் வழங்கியுள்ள செவ்வியொன்றில் இதனைத் தெரிவித்துள்ளார். அங்கு மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர் குறிப்பாக நீர்ப்பாசனம் கமநலம் காணி தொமில் மற்றும் பிரதிப் பொலிஸ்மா அதிபரை நியமிக்கும் உரிமை மாகாணசபைக்கு உள்ளது எனினும் தற்போது அங்கு ஒரு பொலிஸ் கான்ஸ்டபிளைக் கூட மாற்றம் செய்ய முடியாத நிலை காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். சுகாதாரம் கல்வி மிகவும் முக்கியமானது அதன் அனைத்து அதிகாரமும் மத்திய அரசிடமே உள்ளது. சட்டத்தின் பிரகாரம் உள்ள அதிகாரங்களை பிரயோகிக்க முடியாத நிலையில் கடந்த 20 வருடங்களாக அதிகாரங்கள் குறைவடைந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணசபை செயலிழந்து ஒன்றும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டால் ஜனநாயக வழிக்கு வந்துள்ள இளைஞர்கள் மீண்டும் ஆயுதம் தூக்கவேண்டிய நிலை ஏற்படும் என்று தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணங்களுக்கான அனைத்து அதிகாரங்களையும் பெற்றுக் கொள்வதற்கு கிழக்கு மாகாண முதலமைச்சரும் தானும் ஜனாதிபதி பசில் ராஜபக்ஷ ஆகியோருடன் தொடர்ந்து பேசி வருவதாகவும் அதற்கான சாத்தியக் கூறுகள் தென்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

09-11-2008, 9.55AM

இலங்கைக்கு பொருட்களை கடத்திய 6 பேர் தமிழகத்தில் கைது.

பொதுமக்கள் வழங்கிய இரகசிய தகவலின் அடிப்படையில் இலங்கைக்கு பொருட்களை கடத்திச் செல்வதற்காக படகில் ஏற்றிய ஆறு பேர் தமிழக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி திருவைக்குளம் கடற்கரையில் படகில் பொருட்களை ஏற்றியவேளையில் இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் நால்வர் இலங்கையர் எனவும் இருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 1 இலட்சம் இந்திய ரூபாய்களும் 60 ஆயிரம் இலங்கை ரூபாவும் ரொக்கப்பணமாக கைப்பற்றப்பட்டுள்ளதுடன் 2 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பெறுமதியான கடத்தல் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

09-11-2008, 9.24AM

மக்கள் ஒத்துழைப்பு வழங்கினால் பயங்கரவாதத்தினை கட்டுப்படுத்த முடியும் - பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர

மக்கள் பாதுகாப்பு படையினருக்கு தமது பூரண ஒத்துழைப்பினை வழங்கினால் மட்டுமே மலையகத்தில் பயங்கரவாதச் செயற்பாடுகளை கட்டுப்படுத்த முடியும் என மத்திய மாகாணத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.
மலையகத்தில் நேற்று (08.11.2008) சிவில் பாதுகாப்புகுழு உறுப்பினர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். புலனாய்வுத்துறையினரின் தகவலின் படி கொழும்பிற்கு அடுத்த படியாக மத்திய மாகாணத்திலேயே பயங்கரவாத அச்சுறுத்தல் நிலவுவதாக குறிப்பிட்டுள்ள அவர் சிவில் பாதுகாப்புக்குழுக்கள் பாதுகாப்புத் தரப்பினருக்கு ஒத்துழைப்பு வழங்குவதன் மூலம் மக்களை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார்.

09-11-2008, 9.01AM

எரிபொருள்களின் விலையை குறைக்காத எரிபொருள் விற்பனை நிலையங்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படும் - பௌசி

ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ சமர்;ப்பித்துள்ள 2009ம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தின் பிரகாரம் எரிபொருட்களின் விலைகளை குறைக்காத எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பெற்றோலியத்துறை அமைச்சர் எ.ஏச்.எம்.பௌசி தெரிவித்துள்ளார். கொழும்பின் பல பகுதிகளில் விலை குறைப்பிற்கு ஏற்ப பெற்றோல், டீசல், மண்ணெண்ணை என்பன விற்பனை செய்யப்படவில்லை என பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளதனை அடுத்து இந்த அறிவிப்பினை அமைச்சர் விடுத்துள்ளார். எரிபொருள்களின் விலைகள் கூடலாம் என்ற எண்ணத்தில் பெற்றோல் நிரப்பு நிலையங்கள் குறைந்தளவில் எரிபொருட்களை சேமித்து வைத்துள்ளதாகவும் நுகர்வோர் பாதிப்படையும் வகையில் செயற்படும் எவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

09-11-2008, 8.51AM

மேல் மாகாணத்திலுள்ள ஆட்டோக்கள் அனைத்தும் இன்று பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்படவுள்ளன.

மேல் மாகாணத்தில் சேவையிலீடுபடும் ஆட்டோக்கள் தொடர்பான கணக்கெடுப்பு ஒன்று இன்று (09.11.2008) நடைபெறவுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது. காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரையில் இந்தக் கணக்கெடுப்பு நடைபெறும் என்றும் ஆட்டோ உரிமையாளர்கள் தத்தமது பொலிஸ் நிலையங்களுக்கு சென்று தமது விபரங்களை பதிவு செய்து கொள்ளுமாறு பொலிஸார் கேட்டுள்ளனர். பழுது காரணமாக திருத்த வேலைகளை மேற்கொண்டுள்ள ஆட்டோக்களின் உரிமையாளர்கள் ஆட்டோ ஆவணங்களுடன் சென்று தமது தகவல்களை பதிவு செய்வது அவசியம் என பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

08-11-2008, 8.31PM

கடற்படையின் கப் வண்டி காணாமல் போயுள்ளது.

 

கடற்படைக்கு சொந்தமான கப் வண்டி ஒன்று இன்று (08.11.2008) காலை 9.50 மணியளவில் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மருதானை பஞ்சிகாவத்தையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 253 -1133 இலக்கமுடைய கப் வண்டியே காணாமல் போயுள்ளது. இது தொடர்பான தகவல் அறிந்தோர் பொலிஸ் நிலையங்களுக்கு தகவல் வழங்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி ரஞ்சித்குணசேகர தெரிவித்துள்ளார்.

 

08-11-2008, 8.20PM

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி யாழில் பொதுமக்கள், கட்சி ஆதரவாளர்களுடன் சந்திப்பு
 

தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் திரு.வீ.ஆனந்தசங்கரி கடந்த 05.11.2008 அன்று யாழ்ப்பாணம் வந்துள்ளார். யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி காரியாலயத்தில் தங்கியுள்ள அவரை கட்சியின் ஆதரவாளர்களும், பொதுமக்களும் சந்தித்து தமது குறைகளையும், தேவைகளையும் தெரிவித்து வருகின்றனர். நாளை ஞாயிற்றுக்கிழமை (09.11.2008) காலை 10 மணிக்கு விசேட கலந்துரையாடல் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேற்படி அலுவலகத்தில் இடம்பெறும் இந்த கலந்துரையாடலில் கலந்துகொள்ளுமாறு தமிழர் விடுதலைக் கூட்டணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் திரு. இ.சங்கையா கட்சி ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலையில் தமிழ் மக்களின் எதிர்காலம், இளைஞர் யுவதிகளின் வேலை வாய்ப்பு மற்றும் கடுமையான பாதிப்புக்குள்ளாகியிருக்கும் குடும்பங்களின் வாழ்வாதார பிரச்சினைகள், அவர்கள் எதிர்நோக்கும் உதவிகள் சம்பந்தமான ஆக்கபூர்வமான கருத்துக்களுடன் கூடிய கலந்துரையாடலாக இது அமையும் என தெரிவிக்கப்படுகின்றது.
 

08-11-2008, 2.59PM

ஜனநாயகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிப்பது புலிகளுக்கு சாதகமான சூழலை உருவாக்கும் - தினேஸ் குணவர்த்தன.

இலங்கையில் ஜனநாயகத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக வெளிநாடுகளில் பிரச்சாரம் மேற்கொள்வது புலிகள் அமைப்பிற்கு சாதகமான சூழ்நிலையை தோற்றுவிக்கும் என்று அரசாங்க கட்சியின் பிரதான கொறடா அமைச்சர் தினேஸ்குணவர்த்தன தெரிவித்துள்ளார். ஊடக சுதந்திரம் குறித்து ஐக்கிய தேசியக் கட்சி குரல் எழுப்பி வருகின்றது ஆனால் றிச்சட்டி சொய்சா படுகொலை செய்யப்பட்டபோது ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க எந்தவித அறிக்கையினையும் வெளியிடவில்லை எனக்குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (08.11.2008) இடம்பெற்ற வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போது இதனைத் தெரிவித்துள்ளார். ஜனநாயக ரீதியில் நடைபெற்ற 15வது தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க தோல்வி கண்டுள்ளதாக குறிப்பிட்ட அவர் இலங்கையில் ஜனநாயகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவதில் எவ்வித உண்மையும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

08-11-2008, 2.38PM

புலிகள் ஊடுருவியுள்ளதாக கிடைத்த தகவலினை அடுத்து தமிழகத்தின் பல பகுதிகளில் பொலிஸார் தேடுதல்.

புலிகள் இயக்க உறுப்பினர்கள் ஊடுருவியுள்ளதாக கிடைத்த தகவலினை அடுத்து நேற்று (07.11.2008) தமிழகத்தின் பல பகுதிகளில் பொலிஸார் தேடுதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தமிழகத்தின் கரையோரப் பிரதேசங்களின் பாதுகாப்பு உச்ச கட்டத்தில் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் விசேட போர்க்கப்பல்கள், ஹெலிகள் என்பன கடற்பரப்பில் ரோந்துப் பணியினை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகின்றது.

08-11-2008, 2.21PM

இலங்கையின் ஆட்புல ஒருமைப்பாட்டிற்கு ஐக்கிய தேசியக் கட்சி ஒத்துழைப்பு வழங்கும் - தலைவர் ரணில் விக்கிரமசிங்க

பாதுகாப்பு நடவடிக்கைகளின் மூலமே பயங்கரவாதத்திற்கு பதிலளிக்க முடியும் எனத் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அது சில இடங்களில் இராணுவத்தினராலும், இன்னும் சில இடங்களில் பொலிஸாரினாலும் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (08.11.2008) வாய் மூலக் கேள்விக்குப் பதிலளிக்கும்போது இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கையில் ஆட்புல ஒருமைப்பாட்டினை பாதுகாப்பதற்கு வேண்டிய ஒத்துழைப்பினை தமது கட்சி வழங்கும் எனக்குறிப்பிட்டுள்ள அவர் இலங்கைக்கு வருகை தந்திருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக விவகாரங்களுக்கான ஆணையாளர் உள்ளிட்ட அனைத்து வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கும் இந்தக் கருத்தினை தாம் வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

08-11-2008, 10.12AM

வன்னியில் 12 ஆயிரம் பேர் மீண்டும் இடம்பெயர்ந்துள்ளனர்.

மோதல் நிலை காரணமாக ஏற்கனவே இடம்பெயர்ந்து பூநகரி, சென்மன்குன்று பகுதிகளில் தங்கியிருந்த 12 ஆயிரம் மக்கள் மீண்டும் இடம்பெயர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதிகளில் ஷெல்கள் வீழ்ந்து வெடிப்பதன் காரணமாக இந்த இடப்பெயர்வினை மக்கள் எதிர்நோக்கியுள்ளனர். கிரான்சி, வலைப்பாடு ஷெல் வீழ்ந்து வெடித்ததனால் குறித்த பகுதி மக்கள் செம்மன்குன்றுப் பகுதியில் தஞ்சமடைந்திருந்ததாகவும் தற்போது அப்பகுதியிலும் ஷெல் வீழ்ந்து வெடிப்பதன் காரணமாக மக்கள் இடம்பெயர்ந்தவண்ணம் உள்ளதாக தெரிகிறது.

08-11-2008, 9.58AM

உயர் பாதுகாப்பு வலயத்தினுள் மக்களை மீளக்குடியமர்த்துவது தொடர்பாக ஆராயும் கூட்டம் நடைபெற்றுள்ளது.

யாழ் உயர் பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட பகுதிகளில் மக்களை மீளக்குடியமர்த்துவது தொடர்பாக ஆராய்வதற்கான கூட்டம் நேற்றயதினம் (07.11.2008) காங்கேசன்துறையில் நடைபெற்றுள்ளது. இக்கூட்டத்தில் யாழ் மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி ஜி.ஏ.சந்திரசிறி, யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கணேஸ், மற்றும் பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டதாக தெரியவருகின்றது. தெல்லிப்பளை உயர் பாதுகாப்பு வலயத்தினுள் மக்களை மீளக்குடியமர்த்துவது, வன்னியிலிருந்து தப்பி வரும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பது தொடர்பாக இங்கு ஆராயப்பட்டுள்ளது.

08-11-2008, 09.38AM

யாழ் குப்பிளானில் இருவர் கடத்தப்பட்டுள்ளனர்.

 

யாழ்ப்பாணம் குப்பிளான் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு ஆயுததாரிகளினால் கூலித் தொழிலாளிகள் இருவர் கடந்த 1ம் திகதி கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குப்பிளான் தெற்கு குப்பிளான் பிரதேசத்தைச் சேர்ந்த மரிசா நிமல்ராஜ் (வயது 27), ஆர்.ஞானராஜா (வயது 27) ஆகியோரே கடத்தப்பட்டுள்ளனர்.

08-11-2008, 09.17AM

இராணுவத் தளபதி சரத்பொன்சேகா வன்னிக்கு விஜயம்.

வன்னியில் களமுனைகளின் பாதுகாப்பு தொடர்பாக ஆராய்வதற்காக இராணுவத் தளபதி லெப்டினன் ஜென்ரல் சரத்பொன்சேகா நேற்றயதினம் (07.11.2008) வன்னிப் பிராந்திய கூட்டுப்படைகளின் தலைமையகத்திற்கு விஜயம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இராணுவத்தின் நேரடிக் கண்காணிப்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் சில மனிதாபிமான நடவடிக்கைகள் தொடர்பாக இராணுவத் தளபதி ஆராய்ந்துள்ளதாகவும், களமுனை நிலவரங்கள் தொடர்பாக வன்னிப் பிராந்திய கட்டளைத் தளபதி மேஜர் ஜென்ரல் ஜெகத் ஜெயசூரிய இராணுவத் தளபதி சரத்பொன்சேகாவிற்கு விளக்கமளித்துள்ளதாகவும் தெரியவருகின்றது. வன்னிப் பகுதி மக்களுக்கான உணவு வினியோகம், இடம் பெயர்ந்துள்ள மாணவர்களின் கல்வி மறுசீரமைப்பு தொடர்பாக இந்த விஜயத்தின்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. மேலும் புலிகளின் பயங்கரவாதச் செயல்களுக்கு எதிராக இலங்கை இராணுவம் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைளுக்கும் உதவ அமெரிக்கா தயாராகவுள்ளதாக தெரிவித்துள்ளதாகவும் இராணுவத் தளபதி அங்கு தெரிவித்துள்ளார்.

08-11-2008, 9.01AM

புலிகளின் பிடியிலிருந்து தப்பிய 13 பேர் புல்மோட்டை கடற்படையினரிடம் தஞ்சம்.

புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமான முல்லைத்தீவுப் பகுதியிலிருந்து 3 குடும்பங்களைச் சேர்ந்த 13 பேர் தப்பிவந்து கடற்படையினரிடம் தஞ்சமடைந்துள்ளதாக கடற்படைப் பேச்சாளர் டி.பி.கே.தஸநாயக்க தெரிவித்துள்ளார். இவர்களுள் 8 ஆண்களும், 5 பெண்களும் அடங்குவதாக தெரிவித்துள்ள அவர் புல்மோட்டை கடற்பரப்பில் நேற்று முன்தினம் (06.11.2008) தஞ்சமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். புலிகளினால் தொடர்ச்சியாக வழங்கப்பட்ட நெருக்கடி காரணமாக அங்கிருந்து படகில் தப்பி வந்ததாக இவர்கள் தெரிவித்துள்ளனர். இவர்களுக்கான அடிப்படை வசதிகளை வழங்கியுள்ள கடற்படையினர் பொலிஸாரிடம் கையழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகின்றது.

 

08-11-2008, 8.49AM

போர் நிறுத்தத்தினை இரு தரப்பினரும் உடன்பட்டால் மட்டுமே ஏற்படுத்த முடியும் - முதல்வர் மு.கருணாநிதி

புலிகள் இயக்கம் தொடர்பான நிலைப்பாட்டில் ராஜீவ்காந்தியின் மறைவின் முன் மறைவின் பின் என்ற இரு நிலைப்பாட்டில் தி.மு.க உள்ளதாக அதன் தலைவரும், தமிழக முதல்வருமான முத்துவேல் கருணாநிதி தெரிவித்துள்ளார். இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண இரு தரப்பினரும் யுத்த நிறுத்தம் ஒன்றிற்கு முன்வந்து நடுநிலையான நாடுகளுடன் இந்தியாவும் ஏற்றுக் கொள்ளக்கூடிய சிறந்த அரசியல் தீர்வொன்றைக் காண முன்வரவேண்டும் என வலியுறுத்தி அவர் நேற்று (07.11.2008) வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

போர் நிறுத்தம் என்பது இரு தரப்பினரும் உடன்பட்டால் மாத்திரமே ஏற்படுத்தக் கூடியதொன்றாகும். இன்று தமிழ் நாட்டிலுள்ள அனைவரும் போர் நிறுத்தம் செய்யுமாறு இலங்கையை கோருகின்றனர். போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்துமாறு இந்திய அரசை கோருகின்றோம். இரு தரப்பினரதும் நிலைமையை தெரியாமல் ஒரு தரப்பை மட்டும் போர் நிறுத்தம் செய்யுமாறு வலியுறுத்துவது எந்தளவிற்கு சாத்தியமானது எனத் தெரியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

07-11-2008, 6.55PM

அம்பாறை தெம்பிட்டிய பகுதில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 3 பாதுகாப்பு படைவீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

அம்பாறை தெம்பிட்டிய பகுதியில் இன்று (07.11.2008) பிற்பகல் 2 மணியளவில் இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்றில் மூவர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் ஊர்க்காவல் படைவீரர் இருவரும், ஒரு பொலிஸ் அதிகாரியும் உயிரிழந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார தெரிவித்துள்ளார். மேலும் ஊர்க்காவல் படைவீரர் ஒருவர் காயமடைந்து மகா ஓயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

07-11-2008, 6.20PM

மேலும் மூவர் கியு பிரிவு பொலிஸாரினால் கைது

 

இலங்கையிலிருந்து அகதிகளாக தமிழகத்திற்கு சென்ற மேலும் 3 புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் தமிழக கியு பிரிவு பொலிஸாரினால் நேற்றயதினம் (06.11.2008) கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம், வவுனியா, பலாலி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணைகளின்போது முரண்பட்ட தகவல்களை வழங்கியதன் காரணமாக இவர்களை செங்கல்பட்டு சிறப்பு முகாமில் தடுத்து வைத்துள்ளதாக தமிழக புலனாய்வுத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 

07-11-2008, 5.45PM

சுற்றுலாத்துறை அமைச்சர் மிலிந்தமொறகொட தலைமையிலான குழு இவ்வாரம் ஈரான் செல்லவுள்ளது.
 

சுற்றுலாத்துறை அமைச்சர் மிலிந்தமொறகொட தலைமையிலான குழு இந்த வார இறுதியில் ஈரானுக்கு விஜயமொன்றினை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஈரான் ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் அங்கு செல்லும் மிலிந்த மொறகொட தலைமையிலான குழு அந்த நாட்டின் உயர் அதிகாரிகளைச் சந்தித்து பேச்சு வார்த்தைகளிலீடுபடுவர் என சுற்றுலாத்துறை அமைச்சு அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும் அமைச்சர் மிலிந்தமொறகொட ஈரானில் நடைபெறவுள்ள சுற்றுலாத்துறை முதலீட்டு வாப்புக்கான இரண்டாவது சர்வதேச மாநாட்டிலும் கலந்து கொள்ளவுள்ளார்.
 

07-11-2008, 5.35PM

வன்னிக்கான உணவுலொறிகள் எதிர்வரும் காலங்களில் திங்கட்கிழமைகளில் அனுப்பிவைக்கப்படும் - பி.எஸ்.எம்.சாள்ஸ்
 

வன்னியில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு எதிர்வரும் காலங்களில் திங்கட்கிழமைகளிலேயே உணவுப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் என வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்துள்ளார். வன்னிக்கான உணவுப் பொருட்களை எடுத்துச் செல்லும் லொறிகள் இதுவரை காலமும் வெள்ளிக்கிழமைகளில் அனுப்பிவைக்கப்பட்டு வந்ததாகவும் எனினும் வினியோகத்தினை இலகுபடுத்துவதற்காக எதிர்வரும் காலங்களில் திங்கட்கிழமைகளில் அனுப்பிவைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நடவடிக்கைகக்கு அமைவாக வன்னிக்கு பொருட்களை எடுத்துச் செல்லும் லொறிகள் எதிர்வரும் திங்கட்கிழமையே அனுப்பிவைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
 

07-11-2008, 5.13PM

அமெரிக்க தூதுவர் யதார்த்தத்திற்கு புறம்பான கருத்துக்களை தெரிவிப்பதாக மனோகணேசன் குற்றச் சாட்டு.
 

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பராக் ஒபாமா தெரிவு செய்யப்பட்டுள்ளமை இலங்கை தொடர்பான அமெரிக்காவின் கொள்கையில் மாற்றத்தினை ஏற்படுத்தாது எனத் தெரிவித்துள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் றொபேட் பிளெக் என்றாவதொருநாள் தமிழர் அல்லது முஸ்லீம் இனத்தவர் இலங்கையில் ஜனாதிபதியாகலாம் எனத் தெரிவித்துள்ளமை முரண்பட்ட தகவலாக உள்ளது என மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

 

ஜனாதிபதி பதவி தொடர்பாக கூறும் அமெரிக்க தூதுவர் இலங்கையில் உப ஜனாதிபதி என்ற ஒரு பதவிகூட இல்லை என்பதை அறியாதவரா? எனக் கேள்வியெழுப்பியுள்ளார். எனவே யதார்த்தத்திற்கு அப்பால்ப்பட்ட கருத்துக்களை வெறுமனே வெளியிடாது இனப்பிரச்சினைத் தீர்விற்கான பேச்சு வார்த்தையொன்றினை மேற்கொள்ள அழுத்தம் கெர்டுப்பதற்கு அமெரிக்க தூதுவர் றொபேட் பிளெக் முன்வரவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
 

07-11-2008, 4.58PM

அமைச்சர் சம்பிக்கவின் கருத்தினைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்.
 

அமைச்சர் சம்பிக்க ரணவக்க முஸ்லீம்களுக்கு எதிராக தெரிவித்ததாக கூறப்படும் கருத்துக்களைக் கண்டித்து மருதானைப் பள்ளிவாசலுக்கு முன்பாக இன்று (07.11.2008) ஆர்ப்பாட்டம் ஒன்று நடாத்தப்படவுள்ளது. முஸ்லீம் உரிமைகளுக்கான அமைப்பு இன்று ஜூம்மா தொழுகையின் பின்னர் ஆர்ப்பாட்டம் நடாத்துவதற்கு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. இதேவேளை இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கொழும்பிலுள்ள முஸ்லீம் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
 

07-11-2008, 4.50PM

தமிழக அரசின் நிவாரணப் பொருட்கள் கப்பல் மூலம் கொழும்புத்துறை முகத்தினை வந்தடையவுள்ளது.
 

தமிழக அரசினால் இலங்கைத் தமிழ் மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணப் பொருட்கள் நாளை அல்லது நாளை மறுதினம் சென்னைத் துறைமுகத்திலிருந்து கப்பல் மூலம் கொழும்புத் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பொருட்கள் அனைத்தும் தரமானவையா என்பதனை தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி நேரில் சென்று பார்வையிட்டுள்ளதாக தெரியவருகின்றது.

 

கொழும்புத்துறைமுகத்தினை வந்தடையும் நிவாரணப் பொருட்கள் இந்திய தூதரகத்திடம் ஒப்படைக்கப்படும் எனவும் பின்னர் அவை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக வினியோகிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 ஆயிரம் மெற்றித் தொன் பொருட்கள் 80 ஆயிரம் பொதிகளாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
 

07-11-2008, 4.02PM

தமிழர் உரிமைக்காக போர்க்கோலம் பூண்டவர்கள் சகோதரப் படுகொலை மேற்கொள்வதில் குறியாகவுள்ளனர் -மு.கருணாநிதி.

தமிழர்கள் மீதான படுகொலையை தடுத்து நிறுத்தி உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு போர்க்கோலம் பூண்டவர்கள் பகைவர்கள் மீது பாய்ந்திடாமல் சகோதர யுத்தம் நடாத்துவதிலும், யுத்தத்தில் மடியும் தமது தளபதிகளுக்கு சமாதிகள் அமைப்பிதிலும் விறுவிறுப்பைக் காட்டுகின்றனர் என தமிழக முதல்வர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார். இந்த விறுவிறுப்பினை ஒற்றுமையில் காட்டத் தேவையில்லையெனச் செயற்பட்டு தமது இனம் அறவே செத்து மடிவது குறித்து அக்கறையற்றே இருந்துவிட்டனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக அவர் நேற்று (06.11.2008) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார். அதிர்ச்சி தரக்கூடியதும், ஆறாத்துயரடையத்தக்கதுமான நிகழ்வுகள் இலங்கை மண்ணில் நித்தியத் திருவிழாக்கள் ஆகி இறுதிக் கட்டமாக அமைந்துள்ள நிலை யாவரும் அறிந்ததே. இந்த நிலைக்கு முடிவுவு கட்ட என்னால் மட்டும் முடியாது. இதை உணர்ந்தோர் கூட என்னை குற்றம் சுமத்துவது முறையல்ல என்று குறிப்பிட்டுள்ளார். இந்திய இறைமைக்கு எதிரான கருத்தினை வெளியிடுபவர்களை கைது செய்தால் உடனே கருணாநிதி இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக செயற்படுகின்றார் என முத்திரை குத்துகின்றனர். நான் தெரிவிக்கும் இக்கருத்துக்கள் இலங்கையில் காயப்பட்டுள்ளவர்களுக்கும், தமிழ் நாட்டிலுள்ள அரசியல் வாதிகளின் எரிச்சலுக்கும் மருந்தாக அமையட்டும் எனத் தெரிவித்துள்ளார்.

07-11-2008, 3.42PM

கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட மக்கள் பட்ட கஷ்டங்கள் போதும் ஜனாதிபதி பாராளுமன்றத்தில் தமிழில் உரை.

கொடூரமான பயங்கரவாதிகளின் துப்பாக்கிக்குப் பயந்து வாழ்கின்ற கிளிநொச்சி, முல்லைத்தீவு பிரதேச அப்பாவி மக்களை நாம் பாதுகாக்கவேண்டும் அவர்களுக்கு உதவி செய்யவேண்டும் எனவே குறித்த மாவட்டங்களில் வாழும் மக்கள் படையினருடன் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 2009ம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தினை பாராளுமன்றத்தில் சமர்;ப்பித்து தமிழில் உரையாற்றிய ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் தமிழில் உரை நிகழ்த்திய அவர் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாட்ட தமிழ் மக்கள் பட்ட கஸ்டங்கள் போதும். அந்தப் பகுதியிலுள்ள பாடசாலைகள், ஆஸ்பத்திரிகள், பாதைகள், மின்சாரம், போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த வேண்டும். அந்த அப்பாவி மக்களின் வாழ்க்கையினை சுபீட்சமாக்க வேண்டும். அதனை விரைவாக நிறைவேற்றும் வரை, அங்கே வாழும் எமது சகோதர மக்கள் பொறுமையாக செயற்படுவார்கள் என நான் நம்புகின்றேன் என்று தெரிவித்தார். எமது பாதுகாப்பு படையினர் அந்தப் பகுதிக்குள் வருவது மனித நேயத்தின் பேரால் உங்களை மீட்கவே எனவே அவர்களோடு ஒன்று சேருமாறு உங்களுக்கு அழைப்புவிடுக்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

07-11-2008, 3.11PM

வவுனியா நகரில் இளைஞர் கடத்தப்பட்டுள்ளார்.

 

வவுனியா நகரில் வெள்ளைவானில் வந்த ஆயுததாரிகளினால் இளைஞர் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நகரில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றில் பணியாறும் இளைஞரே நேற்று (06.11.2008) மாலை 6 மணியளவில் கடத்தப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி. ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.

 

07-11.2008, 2.50PM

பட்ஜெட்டிற்கு எதிராக வாக்களிக்க ஐ.தே.க தீர்மானம்.
 

ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான மகிந்தராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அடுத்தாண்டிற்கான வரவு செலவுத்திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
 

அரசாங்க நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகளைப் போன்று தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்படவில்லை, கைத் தொழிற்துறையினை கட்டியெழுப்பப்போவதாக அரசு அறிவித்துள்ள போதும் பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை பாதணிகளிலிருந்து அன்றாடத் தேவைக்கான அனைத்துப் பொருட்களின் விலைகளும் உயர்த்தப்பட்டுள்ளது. வாழ்க்கைச் செலவினத்திற்கு ஏற்ப மக்களின் எதிர்பார்ப்பை இந்த பட்ஜெட் நிவர்த்தி செய்யவில்லை போன்ற காரணங்களினால் இந்த வரவு செலவுத்திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க எண்ணியுள்ளதாக ஐ.தே.க தெரிவித்துள்ளது.

 

07-11-2008, 9.53AM

எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

பெற்றோல் மற்றும் டீசல் என்பனவற்றின் விலைகள் நேற்று (06.11.2008) நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு லீற்றர் பெற்றோல் 15 ரூபாவாலும், டீசல் ஒன்றின் விலை 30 ரூபாவாலும், மண்ணெ;ணை லீற்றர் 20 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளது.

இதுவரை காலமும் 157 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட பெற்றோல் 142 ரூபாவாகவும், 110 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட டீசல் 80 ரூபாவாகவும், 80 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட மண்ணெண்னை 60 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படவுள்ளது என ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ தனது 2009ம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தில் தெரிவித்துள்ளார்;. எதிர்காலத்தில் உலக சந்தையில் எரிபொருட்களின் விலைகள் மாற்றமடையும்போது மேலும் எரிபொருட்களின் விலைகள் குறைவடையும் எனவும் இந்த விலைக்குறைப்பிற்கு ஏற்ப பஸ் கட்டணங்கள் 25 சதவீதத்தினால் குறைக்கப்படவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

07-11-2008, 9.33AM

பல்வேறு சலுகைகளுடன் 2009ம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

 

எரிபொருட்களின் விலை குறைப்பு, இறக்குமதிகளை குறைத்து உள்ளுர் உற்பத்தியினை ஊக்குவித்தல், செஸ் வரி வீதத்தினை அதிகளவில் அதிகரித்து அடுத்த ஆண்டு ஜனவரி முதல் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவினை குறைந்த பட்சம் ஆயிரம் ரூபாவால் கூட்டுதல், ஓய்வூதியத்தினை மாதமொன்றிற்கு 560 ரூபாவினால் அதிகரித்தல் போன்றவற்றினை உள்ளடக்கி ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவினால் நேற்றயதினம் (06.11.2008) அடுத்தாண்டிற்கான வரவு செலவுத்திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
 

பாராளுமன்ற வளாகத்தில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் ஹெலியில் பாராளுமன்றம் வந்த ஜனாதிபதி வரவு செலவுத்திட்டத்தினை சமர்;ப்பித்து உரையாற்றியுள்ளார். பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு நாட்டு மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய சூழ்நிலை ஏற்படுத்தப்படும் எனக் குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி வடக்கு மக்களுக்கு விரைவில் ஜனநாயகத்தினைப் பெற்றுக் கொடுத்து அங்கு அபிவிருத்தியினை முன்னெடுக்க எண்ணியுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் புலிகள் அமைப்பு ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு அரசியல் நீரோட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு தாம் இந்தச் சந்தர்ப்பத்தில் மீண்டும் ஒரு அழைப்பினை விடுப்பதாகவும் இல்லேயேல் அவர்கள் இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்படுவது உறுதியெனவும் தெரிவித்துள்ளார்.

 

ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ வரவு செலவுத்திட்டத்தினை சமர்ப்பிக்க பாராளுமன்றத்தினுள் நுழைந்தபோது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 22 பேரும் வெளியேறியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் ஐ.தே.க. கட்சியின் பல உறுப்பினர்களும் சபையில் சமூகமளித்திருக்கவில்லை எனத் தெரியவருகின்றது.

 

07-11-2008, 09.02AM

புலிகளின் இனங்காணப்பட்ட இலக்குகள் மீது விமானத் தாக்குதல் - தே.பா.ஊ.ம நிலையம் தெரிவிப்பு.

 

கிளிநொச்சி நாச்சிக்குடா பாதுகாப்பு முன்னரங்கப் பகுதிக்கு வடக்கே அமைந்துள்ள புலிகளின் இனங்காணப்பட்ட முக்கிய முகாம் ஒன்றின் மீது நேற்று (06.11.2008) இரவு விமானங்கள் தாக்குதல் நடாத்தியுள்ளன. எம்.ஐ.24 ரக ஹெலிகளைப் பயன்படுத்தி இத்தாக்குதல் நடாத்தப்பட்டதாக விமானப்படைப் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனகநாணயக்கார தெரிவித்துள்ளார். ஏ32 வீதியை கைப்பற்றும் நடவடிக்கையிலீடுபட்டுவரும் படையினருக்கு உதவியாக இந்தத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதேபோன்று நேற்று பிற்பகல் 2 மணியளவில் பரந்தன் பகுதியில் புலிகளின் இலக்கு ஒன்றின் மீது மிக் 27 ரக விமானங்ககள் தாக்குதல் நடாத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் இந்தத் தாக்குதலில் 12 சிவிலியன்கள் காயமடைந்தும், கால்நடைகள் பல உயிரிழந்தும் உள்ளதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

06-11-2008, 4.55PM

துப்பாக்கிச் சூட்டில் இரண்டு குழந்தைகள் படுகாயம்.

மட்டக்களப்பு கொம்மாந்துறைப் பகுதியில் இன்று (06.11.2008) காலை 6.30 மணியளவில் இடம் பெற்ற துப்பாக்கிப் பிரயோகச் சம்பவம் ஒன்றில் இரு சிறுவர்கள் காயமடைந்துள்ளனர். புலேந்திரன் தேவிகா (வயது 11ஃ2) சிவக்குமார் சிவசூரியன் (வயது 8) ஆகிய சிறுவர்களே காயமடைந்து செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் மேலதிக சிகிச்சைக்காக தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான நின்ற இளைஞர்களை பொலிஸார் விசாரணைக்கு அழைத்தபோது அவர்கள் தப்பியோடியதாகவும் இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் சிறுவர்கள் காயமடைந்ததாகவும் தெரியவருகின்றது

06-11-2008, 4.22PM

அடுத்தாண்டிற்கான வரவு செலவுத்திட்டம் ஜனாதிபதியினால் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

2009ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான மகிந்தராஜபக்ஷவினால் இன்று (06.11.2008) பிற்பகல் 1 மணியளவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனத் தெரிவி;க்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்;டு பாராளுமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், பாராளுமன்றம் முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகனத் தரிப்பிடம் மூடப்பட்டு அவர்களுக்கு விசேட போக்கு வரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் டபிள்யு.ஜே.எம். லொக்குபண்டார நேற்றயதினம் பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

 

06-11-2008, 4.13PM

றிஷானா நபீக்கின் மேன்முறையீட்டு மனுவினை சவுதிஅரேபிய நீதிமன்றம் அடுத்த ஆண்டு ஜனவரிக்கு ஒத்திவைத்துள்ளது.
 

சவுதிஅரேபிய நீதிமன்றத்தினால் மரண தண்டணை விதிக்கப்பட்டிருக்கும் இலங்கைப் பணிப்பெண் றிஷானா நபீக்கின் மேன்முறையீட்டு மனு அடுத்த வருடம் ஜனவரி மாதம் 3ம் திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பிரதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் குஷேன் பைலா தெரிவித்துள்ளார். றிஷானாவினால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு நேற்றயதினம் (05.11.2008) சவுதிஅரேபிய நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதாகவும் இதன்போதே நீதிமன்றம் வழக்கினை ஒத்திவைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 

06-11-2008, 3.59PM

பதுளை வைத்தியசாலைக்கு மருந்துப் பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன - அமைச்சர் வடிவேல் சுரேஸ்
 

பதுளை மாவட்டத்திலுள்ள அனைத்து வைத்தியசாலைகளுக்கும் 6 மாதங்களுக்கு தேவையான மருந்துப் பொருட்கள் கடந்த 2ம் திகதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார அமைச்சர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார். தற்போது வரையில் கிடைக்காத ஏனைய தோட்;ட வைத்தியசாலைகள் தம்முடன் நேரடியாக தொடர்பு கொள்வதன் மூலம் அதனைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

06-11-2008, 3.38PM

இந்திய காங்கிரஸ் கட்சி புலிகள் இயக்கத்திற்கு எதிரானதேயன்றி தமிழ் மக்களுக்கு எதிரானதல்ல - அமைச்சர் இளங்கோவன்
 

தமிழகத்தின் தஞ்சாவூரில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய இந்திய ஆடைக் கைத் தொழில் அமைச்சர் இளங்கோவன் இந்திய காங்கிரஸ் கட்சி புலிகள் இயக்கத்திற்கு மட்மே எதிரானது அது இலங்கைத் தமிழ் மக்களுக்கு எதிரானதல்ல என்று தெரிவித்துள்ளார்.

 

இலங்கைத் தமிழ் மக்கள் சிங்கள மக்களுக்கு நிகராக முதலம்தரப் பிரஜைகளாக நடாத்தப்படவேண்டும் என்பதையே காங்கிரஸ் கட்சி விரும்புகின்றது. வரலாற்றினை உற்று நோக்கினால் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகல்லால் நேருவே இலங்கைத் தமிழ் மக்களின் வாக்குரிமைக்கும், தமிழ் மொழியை தேசிய மொழியாக்கவும் முன்னின்று உழைத்தவர் எனவே காங்கிரஸ் கட்சி தமிழ் மக்களுக்கு ஆதரவான கட்சியே எனினும் புலிப்பயங்கரவாதம் தோற்கடிக்கப்படவேண்டும் என்பது காங்கிரஸ் கட்சியின் கொள்கையாகவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

 

06-11-2008, 3.12PM

யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மேலும் ஒரு தொகுதியினர் மீளக்குடியமர்த்தப்படவுள்ளனர்.
 

யுத்த சூழ்நிலை காரணமாக திருகோணமலையிலிருந்து இடம்பெயர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தங்கியுள்ள மேலும் ஒரு தொகுதியினரை மீளக் குடியமர்த்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
 

மட்டக்களப்பு மாவட்டத்தின் பாலமீன்மடு, கிரிமிச்சை, பாலச்சோலை, மஞ்சந்தொடுவாய், மட்டக்களப்பு சிங்கள மகாவித்தியாலய முகாம், சின்ன ஊறணி நலன்புரி முகாம், கொக்குவில் 1,2 ஆகிய அகதி முகாங்களில் தங்கியுள்ள 70 குடும்பங்களைச் சேர்ந்த 240 பேர் இவ்வாறு மீளக்குடியமர்த்தப்படவுள்ளதாகவும் இவர்கள் திருகோணமலை கட்டைப்பற்றிச்சான் வடக்குப் பகுதியில் மீளக்குடியேற்றம் செய்யப்படவுள்ளனர் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
 

06-11-2008, 2.55PM

3 வருடங்களுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரியும் பொலிஸ் அதிகாரிகளை இடம்மாற்றம் செய்ய  கோரிக்கை.
 

ஒரே இடத்தில் 3 வருடங்களுக்கு மேல் பணிபுரியும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளை இடமாற்றம் செய்யவேண்டும் என பொலிஸ் திணைக்களம் பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கு அமைய ஒரே இடத்தில் 3 வருடங்களுக்கு மேல் பணிபுரியும் பொலிஸ் அதிகாரிகள் தொடர்பான விபரங்களை பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பிவைக்கவுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஒரே இடத்தில் தொடர்ந்து பணிபுரிவதன் மூலம் குற்றச் செயல்கள், மோசடிகள் என்பன ஏற்பட வாய்ப்புள்ளதனைச் சுட்டிக்காட்டியே பொலிஸ் திணைக்களம் இந்தக் கோரிக்கையினை பொலிஸ்மா அதிபர் ஜயந்த விக்கிரமரட்ணவிடம் முன்வைத்துள்ளதாக தெரியவருகின்றது.

 

06-11-2008, 2.20PM

மன்னார் முருங்கனில் தமிழ் இளைஞர்கள் நால்வர் கைது.

 

மன்னார் முருங்கன் பெரியகுளம் பகுதியில் வெடி மருந்துப் பொருட்களுடன் தமிழ் இளைஞர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி. ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார். குறித்த பகுதி ஊடாக பயணித்த ஆட்டோ ஒன்றினை வழிமறித்து சோதனையிட்டவேளையில் 121 ஜெட்டனேட்டர், 118 ஜெலிட்டினட் குச்சிகள், என்பனவற்றினை மீட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

06-11-2008, 11.01AM

வன்னியில் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடில்லை அமைச்சின் செயலர் ஏ.சி.எம்.ராஷிக் தெரிவித்துள்ளார்.
 

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் தற்போது உணவுப் பொருட்களுக்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லை எனவும், எதிர்வரும் வாரத்தில் அங்கு இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான கூடாரங்கள், மருந்துப் பொருட்களை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த நிவாரண மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் ஏ.சி.எம்.ராஷிக் தெரிவித்துள்ளார். இவ்வாரம் 29 லொறிகளில் உணவுப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர் இவற்றினை அரசாங்க அதிபர்கள் தர்மபுரம், விஸ்வமடு, புதுக்குடியிருப்பு பகுதிகளுக்கு வினியோகிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
 

இதேவேளை கடந்த ஒரு மாத காலப் பகுதியில் வன்னியில் வாழும் மக்களுக்காக 5450 மெற்றித்தொன் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் எஸ்.பி.திவாரட்ண தெரிவித்துள்ளார்.

 

06-11-2008, 10.45AM

ஆயுததாரிகள் மறைந்திருப்பதாக கிடைத்த தகவலினை அடுத்து குங்கவ காட்டுப்பகுதியில் பொலிஸ் இராணுவம் தேடுதல்.

 

குங்கவ காட்டுப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான ஆயுததாரிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்;.எஸ்.பி ரஞ்சித்குணசேகர தெரிவித்துள்ளார். குறித்த பிரதேசத்தில் கறுப்பு உடை அணிந்த 6 ஆயுதம் தாங்கிய இளைஞர்களை பொதுமக்கள் கண்டுள்ளதாக வெளியான தகவலினை அடுத்து அங்கு நேற்று (05.11.2008) பிற்பகல் முதல் தேடுதல் நடவடிக்கை இடம்பெறுவதாக தெரிவித்துள்ளார்.

 

06-11-2008, 10.11AM

உருத்திரபுரம், அக்கராயன்குளம் ஆகியன படையினர் வசம்
 

கிளிநொச்சி உருத்திரபுரம், அக்கராயன்குளம் ஆகிய கிராமங்களை இராணுவத்தின் 58 படைப்பிரிவு தமது முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. பிரிகேடியர் சபேந்திரசில்வா தலைமையிலான படையினர் நேற்று முன்தினம் முதல் மேற்கொண்ட தாக்குதலின் பின்னர் இன்று (06.11.2008) குறித்த பகுதிகள் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளன. மோதலின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போது ஆயுதங்கள், புலி உறுப்பினர்களின் 3 சடலங்கள், வாகனங்கள் என்பன மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

 

06-11-2008, 9.37AM

என்றாவதொருநாள் தமிழ், முஸ்லீம் இனத்தவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படும் நிலைமை தோன்றும் -  றொபேட் பிளெக்.
 

அமெரிக்காவில் கறுப்பினத்தவரான பராக் ஓபாமா ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதைப்போன்று என்றோ ஒருநாள் இலங்கையில் தமிழ், முஸ்லீம் இனத்தவர் ஜனாதிபதியாக தெரிவாகும் வாய்ப்பு உள்ளது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் றொபேட் பிளெக் தெரிவித்துள்ளார். பராக் ஒபாமாக ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளதன் மூலம் இலங்கை தெரிந்துகொள்ளவேண்டிய விடயம் என்னவென ஊடகவியலாளர்கள் கேட்டதற்கு பதிலளிக்கும் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

அமெரிக்காவில் கறுப்பினத்தவர் சிறுபான்மையாகவுள்ளனர் எனினும் அவர்களில் ஒருவரே ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதன்எ மூலம் சிறந்த ஜனநாயகம் நிலவும் நாடு அமெரிக்கா என்பதில் நான் பெருமைகொள்கின்றேன். அனைவருக்கும் ஜனநாயகம் நிலவ இடமளிக்கவேண்டும். ஏற்கனவே சிறந்த ஜனநாயகம் இலங்கையில் உள்ளது. என்றாவதொருநாள் இளம் தமிழரோ, இளம் முஸ்லீமோ ஜனாதிபதியாக தெரிவாகும் வாய்ப்புள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

 

06-11-2008, 9.01PM

வன்னியில் இடம்பெயர்ந்தோர் தங்குமிடமின்றி அவதிப் படுகின்றனர் ஐ.நா முகவர்களின் நிலையியற்குழு தெரிவிப்பு.

வன்னியில் இடம்பெயர்ந்துள்ள மக்களில் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு உரிய தங்குமிடங்கள் அமைத்துக் கொடுக்கப்படவில்லை என்றும் அவர்களின் தேவைகளை நிறைவு செய்ய முதற்கட்டமாக சுமார் 20 ஆயிரம் குடும்பங்களுக்கு தற்காலிக தங்குமிடங்களை அமைத்துக் கொடுக்கப்படவேண்டும் என ஐ.நா முகவர் நிலையங்களின் நிலையியற்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அது வெளியிட்டுள்ள அறிக்கையில் கிளிநொச்சி நகரப் பகுதியில் ஷெல் மற்றும் விமானத் தாக்குதல்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இதன் காரணமாக இடம்பெயர்ந்த குடும்பங்கள் ஒழுங்கான தங்குமிடமின்றி அவதிப்படுகின்றனர். தற்போது கூடாரச்சீலைகள் தொண்டு நிறுவனங்களிடமிருந்து அவர்கள் பெற்று வருகின்றனர் எனினும் மேலும் 20 ஆயிரம் தற்காலிக தங்குமிடங்கள் அமைக்கவேண்டிய நிலை காணப்படுவதாக தெரிவித்துள்ளது.

இந்தாண்டின் 3ம் காலாண்டிற்கான மருந்து பொருட்கள் கிளிநொச்சி வைத்தியசாலையை வந்தடைந்துள்ளபோதும், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு இதுவரை மருந்துப் பொருட்கள் கிடைக்கவில்லை. கிளிநொச்சி சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் தர்மபுரத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சுகாதார நிலையத்தில் வெளிநோயாளர் பிரிவில் 900 பேர் தினமும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 300 பேர் விடுதிகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறுகின்றனர். அண்மையில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு ஐ.சி.ஆர்.சி 7 ஆயிரம் தற்காலிக கூடாரச் சீலைகளை வழங்கியுள்ளதுடன் 2 பொது சுகாதார சேவை வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாக ஐ.நா முகவர்களின் நிலையியற்குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

05-11-2008, 6.02PM

மட்டு. சித்தாண்டியில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர்கள் இருவர் சுட்டுக்கொலை.
 

மட்டக்களப்பு சித்தாண்டி முருகன் ஆலயத்திற்கு முன்பாக இன்று (05.11.2008) காலை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். அந்த அமைப்பின் குடும்பிமலை கோட்ட சித்தாண்டி பகுதிப் பொறுப்பாளர் பத்மநாதன் பாலகிருஸ்ணன் - தங்கபாண்டி (வயது 24) மற்றும் சுடர் என அழைக்கப்படும் சின்னப்பிள்ளை யோகராசா ஆகியோரே உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

05-11-2008, 5.33PM

புலிகளின் அடக்குமுறைப் பிரதேசத்திலிருந்து 28 சிவிலியன்கள் தப்பி அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்துள்ளனர்.
 

 

புலிகளின் அடக்குமுறைப் பிரதேசத்திலிருந்து நேற்றயதினம் (04.11.2008) காலை படகில் தப்பி வந்த 28 பொதுமக்கள் கடற்படையினரால் காப்பாற்றப்பட்டு காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் 13 ஆண்கள், 9 பெண்கள், 6 குழந்தைகள் அடங்குவதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. கட்டைக்காடு, பரந்தன், கிளிநொச்சி, செம்பியன்பற்று ஆகிய பகுதிகளிலிருந்தே தாம் தப்பி வந்ததாக தெரிவித்துள்ள அவர்கள் புலிகள் தம்மை கட்டாய ஆயுதப்பயிற்ச்சி, மற்றும் முன்னரங்கப் பகுதிகளில் பதுங்குகுழிகளை அமைப்பதற்கு அழைத்துச் சென்றன் காரணத்தினால் அங்கிருந்து வெளியேறி இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்ததாக தெரிவித்துள்ளனர்.
 

05-11-2008, 5.08PM

புலிகள் அமைப்பிற்கு ஆயுதம் கடத்திய வவுனியா இளைஞர் தமிழகத்தில் கியு பிரிவு பொலிஸாரினால் கைது.

 

புலிகள் அமைப்புடன் தொடர்புடைய இலங்கையின் வவுனியாவைச் சேர்ந்த 36 வயதுடைய இளைஞர் தமிழக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். புலிகளுக்கு ஆயுதம் கடத்திய குற்றச் சாட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கியு பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் இலங்கைக்கு தப்பிச் சென்ற இவர் மீண்டும் அகதிகள் என்ற போர்வையில் தமிழகத்திற்குள் நுழைந்தபோது கியு பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

05-11-2008, 4.55PM

வன்னி மக்களின் தேவை தொடர்பாக ஆராயும் கூட்டம் வவுனியாவில் நடைபெற்று முடிந்துள்ளது.
 

வன்னியில் வாழும் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய விடயங்களை எவ்வாறு நிறைவேற்றுவது என்பது தொடர்பான கூட்டமொன்று நேற்று (04.11.2008) வவுனியாவில் நடைபெற்றுள்ளது. வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம் சாள்ஸ் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்று முடிந்துள்ளது.

 

முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இதுவரையில் கடமையாற்றும் அரச சார்ப்பற்ற நிறுவனங்களின் அதிகாரிகள், முல்லைத்தீவு, கிளிநொச்சி மேலதிக அரசாங்க அதிபர்கள் ஆகியோர் இதில் கலந்துகொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக உணவு வினியோகம் தவிர்ந்த ஏனைய விடயங்கள் தொடர்பாக இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார். அரச சார்பற்ற நிறுவனங்களினால் வன்னி மக்களுக்கு வழங்கப்படும் பொருட்கள் அனைத்தும் வவுனியா மாவட்ட செயலகத்தில் கையளிக்கப்பட்டு உரிய பாதுகாப்பு பரிசோதனைகளின் பின்னர் வன்னிக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
 

05-11-2008, 4.17PM

புத்தளம் கற்பிட்டியில் மறைந்திருந்த புலிகள் அமைப்புடன் தொடர்புடைய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 

புத்தளம் கற்பிட்டி பிரதேசத்தில் மறைந்திருந்த புலிகள் அமைப்புடன் தொடர்புடைய இளைஞர் ஒருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி.ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார். இவர் வசமிருந்து தேசிய அடையாள அட்டை 3, பாஸ்போட் 3, சிம் அட்டை 8, உள்ளிட்ட பல பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஊடகவியலாளர்கள் பயன்படுத்தும் ஆள்அடையாள அட்டையினையும் அவரிடமிருந்து கைப்பற்றியிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

05-11-2008, 2.18PM

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் பராக் ஒபாமா வெற்றி பெற்றுள்ளார்.

அமெரிக்காவின் 44 வது ஜனாதிபதியாக ஜனநாயக கட்சியின் வேட்பாளர் பராக் ஒபாமா தெரிவு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தல் நேற்று நடைபெற்றிருந்தது. அதன் வாக்கெண்ணும் பணிகள் நிறைவடைந்து 338; தொகுதிகளில் வெற்றிபெற்ற பராக் ஒபாமா வெள்ளை மாளிகையில் இடம்பிடித்துள்ளதாக இன்று (05.11.2008) அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படும் முதலாவது கறுப்பு இனத்தவர் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார்.

05-11-2008, 11.40AM

பயங்கரவாதத்தினை தோற்கடிக்க இந்தியா ஒத்துழைப்பு வழங்குகின்றது - பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க
 

விசுவாசத்துடனும், சகோதரத்துவத்துடனும் இலங்கையும் இந்தியாவும் தமது நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதாக பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்தினை தோற்கடிக்க ஒத்துழைப்பு வழங்கும் இந்தியா வடக்கு கிழக்கு மக்களுக்கு நிவாரணங்களை வழங்கவும் உதவிவருவதாக தெரிவித்துள்ளார். அவசரகாலச் சட்டத்தினை மேலும் ஒரு மாத காலத்தினால் நீடிக்கும் பிரேரணையை வாக்கெடுப்பிற்கு சமர்ப்பித்து உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

வரலாறு ஞாபகமிருந்தால் இந்திய மக்களுக்கு அந்த துன்பியல் சம்பவம் நினைவிருக்கும் எனவே அவர்கள் புலிகளை ஒருபோதும் மன்னித்துவிடமாட்டார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார். உலகம் பூராகவும் பயங்கரவாதம் செயற்படுகின்றது. பல்வேறு முகத்தினைக் கொண்டு அது செயற்பட்டாலும் அதன் நோக்கம் பொதுமக்களுக்கும், சொத்துக்களுக்கும் சேதமேற்படுத்துவதே! பயங்கரவாதிகளுக்கு பலர் அறிந்தோ, அறியாமலோ ஆதரவளித்து வருகின்றனர் என்பதை வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்ளவேண்டியுள்ளது. தோல்வியின் விளிம்பிலுள்ள பயங்கரவாதிகள் பல்வேறு உபாயங்களை மேற்கொண்டு தாக்குதல்களை நடாத்துகின்றனர். அரசாங்கம் பல்வேறு மனிதாபிமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது எனினும் அதற்கு பல்வேறு அர்த்தம் கற்பிக்கப்படுகின்றது. திம்பு பேச்சு வார்த்தை முதல் புலிகள் எம்மை தொடர்ச்சியாக ஏமாற்றினார்கள் அது இந்த அரசாங்கத்திடம் எடுபடவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

05-11-2008, 10.11PM

யாழ் பருத்தித்துறையில் சடலம் கரையொதுங்கியுள்ளது.

 

யாழ் வடமராட்சி பருத்தித்துறை வெளிச்சவீடு கடற்பகுதியில் சடலமொன்று நேற்று (04.11.2008) காலை கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உருக்குலைந்த நிலையில் குறித்த சடலம் காணப்படுவதாகவும் இதனை மீட்ட பொலிஸார் பருத்தித்துறை வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதாகவும் தெரியவருகின்றது. ஐந்து நாட்களுக்குள் சடலம் அடையாளம் காணப்படாது போனால் வைத்தியசாலையின் தலைமையில் அடக்கம் செய்யுமாறு பருத்தித்துறை நீதவான் ஏ.எஸ்.அலெக்ஸ்ராஜா உத்தரவிட்டுள்ளார்.

 

05-11-2008, 9.34PM

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைகளின் செயற்பாடுகள் நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன - டொக்டர் ஒஸ்மான்.

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வவுனியாவிலிருந்து 2 லொறிகளில் அனுப்பப்பட்ட மருந்துப் பொருட்கள் ஓமந்தைச் சோதனைச்சாவடியில் வைத்து இராணுவத்தினரால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஒஸ்மான் சாள்ஸ் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையுடன் புதுக்குடியிருப்பு, மூங்கிலாறு ஆகிய இடங்களில் இரு பிரதேச வைத்தியசாலைகளும் மேலும் 5 வைத்தியசாலைகளும் பாரிய குறைபாடுகளுடன் செயற்படுவதாகத் தெரிவித்துள்ள அவர் எரிபொருட் தட்டுப்பாடு காரணமாக குறுகிய நேரமே மின்சாரம் வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார். எஞ்சிய நேரத்தில் அரிக்கல் லாம்பினைப் பயன்படுத்தியே மருத்துவ சேவையினை வழங்கிவருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தத்தினால் அதிகளவான மக்கள் இடம்பெயர்ந்து முல்லைத்தீவு மாவட்டத்தினுள் வாழ்வதாகவும் அவர்களின் மருத்துவத் தேவையினை நிறைவு செய்வதில் பாரிய சிரமத்தினை தாம் எதிர்நோக்கி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அம்புலன்ஸ் வண்டிச்சேவையும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கிழமைக்கு இரண்டு முறையே வவுனியா வைத்தியசாலைக்கு நோயாளர்களை அனுப்பிவைத்து வருவதாக தெரிவித்துள்ளார்.

05-11-2008, 9.22AM

சவுதியில் நிர்க்கதியான 45 பெண்கள் நாடு திரும்பினர்.

வெளிநாட்டில் வேலைவாய்ப்புப் பெற்று சவுதி அரேபியா சென்று நிர்க்கதியான நிலையில் காணப்பட்ட 45 வீட்டுப் பணிப்பெண்கள் இன்று (05.11.2008) நாடு திரும்பியுள்ளனர். அதிகாலை 5.20 மணியளவில் இவர்கள் அனைவரும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தினை வந்தடைந்துள்ளதாகவும், இவர்களுக்கான உணவு, போக்குவரத்து உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

05-11-2008, 9.11AM

புத்தளம் நகரில் இளைஞர்கள் இருவர் கடத்தப்பட்டுள்ளனர்.

புத்தளம் நகரின் நூர்மஸ்ஜித் வீதியில் நேற்று (04.11.2008) காலை 10 மணியளவில் இரு தமிழ் இளைஞர்கள் வெள்ளைவானில் வந்த ஆயுததாரிகளினால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. எஸ்.விமலேந்திரன், எஸ்.சசிகரன், ஆகியோரே கடத்தப்பட்டுள்ளனர் என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

04-11-2008, 11.29PM

புலிகள் அமைப்பின் கொடூரத்தினை வெளிக்காட்டும் கண்காட்சி பரிஸ் நகரில் இன்று ஆரம்பம்.
 

புலிகள் அமைப்பின் கொடூரமான செயற்பாட்டினை பிரச்சாரப்படுத்துவதற்கான கண்காட்சி இன்று (04.11.2008) பிரான்ஸ் தலைநகரில் ஆரம்பமாகியுள்ளதாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் செய்தி வெளியிட்டுள்ளது.  காலை 10 மணியளவில் பரிஸ் நகரின் யுனஸ்கோ கேட்போர் கூடத்தில் ஆரம்பமாகியுள்ள இக்கண்காட்சி தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறும் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

 

ஐக்கிய ஐரோப்பிய பயங்கரவாத எதிர்ப்பு இலங்கை அமைப்பும், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சும், ஜனாதிபதியின் ஊடகப் பிரிவும், பரிஸ்வாழ் இலங்கையர்களும் இணைந்து கூட்டாக மேற்கொண்டுள்ளனர். இந்நிகழ்வில் பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளும், தூதுவர்களும் கலந்து கொள்வர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

04-11-2008, 11.20PM

குடாநாட்டைவிட்டு அவசரமாக வெளியேற விரும்புவோர் இரு நாட்களுக்கு முன்னர் ஆவணங்களை கையளிக்கவேண்டும்.
 

யாழ் மாவட்டத்திலிருந்து அவசர காரணங்களுக்காக வெளிமாவட்டங்களுக்கு செல்ல விரும்புவோர் தமக்கான அனுமதியினைப் பெற்றுக் கொள்வதற்கான ஆவணங்களை இரு நாட்களுக்கு முன்னர் யாழ் இராணுவ சிவில் நிர்வாக அலுவலகத்தில் ஒப்படைக்கவேண்டும் என பலாலி இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது.

 

விண்ணப்பப் படிவங்களை பிரதேச செயலகங்களில் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அதனை கிராமசேவகர் மற்றும் பிரதேச செயலாளர்களின் உறுதிப்படுத்தலின் பின்னர் சிவில் நிர்வாக அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு இராணுவத் தலைமையகம் கேட்டுள்ளது. விண்ணப்பம் உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர் பயணிப்பதற்கான காரணம் தெளிவாகும் பட்சத்தில் அவர்களுக்கான பயண அனுமதி வழங்கப்படும் என இராணுவம் அறிவித்துள்ளது.
 

04-11-2008, 10.59PM

யாழ் மானிப்பாய்ப் பகுதியில் சடலம் மீட்பு.

யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (03.11.2008) சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 36 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் இவரின் உடல் தற்போது யாழ் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

04-11-2008, 10.45PM

மன்னாரிலிருந்து படகு மூலம் மேலும் ஐவர் அகதிகளாக தமிழகம் சென்று சேர்ந்துள்ளனர்

மன்னாரிலிருந்து மேலும் ஐவர் அகதிகளாக தமிழகத்தின் இராமேஸ்வரம் கடற்கரையினை நேற்று (03.11.2008) சென்றுள்ளதாக தெரியவருகின்றது. இராமேஸ்வரம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இவர்கள் புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர்களா? என்பது தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக கியு பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்

04-11-2008, 10.12PM

அவசரகாலச் சட்டத்தினை நீடிக்கும் பிரேரணை 75  மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

அவசரகாலச் சட்டத்தினை மேலும் ஒரு மாத காலத்தினால் நீடிக்கும் பிரேரணை 75 மேலதிக வாக்குக்களினால் இன்று (04.11.2008) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரேரணைக்கு ஆதரவாக 85 வாக்குகளும், எதிராக 10 வாக்குகளும் அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அரசாங்கத்துடன் இணைந்து ஜேபிவி, ஜேஎன்பி, ஆகியன ஆதரவாகவும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிராகவும் வாக்களித்துள்ளன. ஐ.தே.கவும், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை எனத் தெரியவருகின்றது.

 

04-11-2008, 09.52PM

அடுத்த ஆண்டிற்கான மாற்று வரவுசெலவுத்திட்டத்தினை ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.
 

அடுத்தவருடத்திற்கான மாற்று வரவு செலவுத்திட்டம் ஒன்றினை ஐக்கிய தேசியக் கட்சி இன்று (04.11.2008) நாடாளுமன்றத்தில் வெளியிட்டுள்ளது. 28 யோசனைகளை கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் காசிம் முன்வைத்துள்ளார். இவற்றில் முக்கியமானதாக அரச ஊழியர்களின் சம்பளம் 7500 ரூபாவாக அதிகரிக்கவேண்டும், எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்படவேண்டும், பாதுகாப்பு செலவினத்தினை தவிர்ப்பதற்கு அமைச்சர்களின் எண்ணிக்கையினை 35 ஆக குறைக்கவேண்டும் போன்ற யோசனைகள் முன்மொழியப்பட்டுள்ளன.
 

04.11.2008, 4.52PM

யாழ் குடாநாட்டு மக்கள் பயங்கரவாதத்தினை முற்றாக நிராகரித்துள்ளனர் -  மேஜர் ஜென்ரல் ஜி.ஏ.சந்திரசிறி.


யாழ் குடாநாட்டில் வாழும் மக்கள் மத்தியில் இயல்பு நிலையைத் தோற்றுவிக்க படையினர் முயற்ச்சித்து வருவதாகவும் கடந்த 3 மாத காலப் பகுதியில் மக்களின் வாழ்க்கையினை சீர் குலைக்கும் வகையில் எவ்வித பாரிய சம்பவங்களும் நடைபெறவில்லை என யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜென்ரல் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

 

இராணுவத்தினர் தமது கடமைகளை மேற்கொள்ள யாழ் குடாநாட்டு மக்கள் முழு ஒத்துழைப்பும் வழங்குவதாக தெரிவித்துள்ள அவர் இவர்கள் பயங்கரவாதத்தினை முற்றாக நிராகரித்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார். இலங்கையின் அரச ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியில் அவர் மேலும் தெரிவித்ததாவது குடாநாட்டில் படையினரின் பால் மக்கள் ஈர்க்கப்பட்டு வருவதாகவும் இதன் காரணத்தினால் வீதித்தடைகள் பல நீக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்பு படையினரின் உதவியுடன் குடாநாட்டு மக்களுக்கான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் தொடர்ந்தும் வினியோகிக்கப்பட்டு வருவதாகவும் குடாநாட்டில் சிறந்த சூழலைப் பேண பல திட்டங்களை நடைமுறைப்படுத்த எண்ணியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 

04-11-2008, 4.10PM

அரசியல் தீர்வு காணுமாறு இரு தரப்பினருக்கும் இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் - பா.உ மனோகேணசன்.

 

இந்தியா அரசாங்கத்தினையும் புலிகள் அமைப்பினையும் ஒரு நியாயமான அரசியல் தீர்விற்கு கொண்டுவர அழுத்தங்களைப் பிரயோகிக்கவேண்டும் என தாம் விரும்புவதாக மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்துள்ளார். இலங்கையின் தற்போதய அரசியல் நிலை தொடர்பாக இலங்கையின் தனியார் வானொலி ஒன்றிற்கு இன்று (04.11.2008) அவர் வழங்கிய விசேட செவ்வியில் இதனைத் தெரிவித்துள்ளார்.

 

குறிப்பாக ஒன்றுபட்ட இலங்கைக்குள் சிறந்த அதிகாரப் பரவலாக்கம் ஒன்றினை ஏற்படுத்த இந்தியா தனது செல்வாக்கினையும், சுயாதிக்கத்தினையும் பயன்படுத்தவேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். நிவாரண உதவிகளை வழங்குவதுடன் விட்டுவிடாது இவ்வாறான அரசியல் தீர்வொன்றை மேற்கொள்ள இந்தியா அழுத்தம் கொடுக்குமானால் அதுவே இறுதியான தீர்வாக அமையும் என தாம் நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
 

04-11-2008, 3.55PM

வவு. ஈரப்பெரியகுளத்தில் வெடிமருந்துடன் பெண் கைது.

 

வவுனியா ஈரப்பெரியகுளம் சோதனைச்சாவடியில் சி4 வெடிமருந்துடன் பெண் ஒருவர் கைது நேற்றயதினம் (03.11.2008) செய்யப்பட்டுள்ளார் என தேசிய பாதுகாப்பு ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது. மன்னாரைச் சேர்ந்த குறித்த பெண்ணிடமிருந்து 500 கிராம் நிறையுடைய சி4 வெடிமருந்து, டெட்டனேட்டர், நேரக்கணிப்பு கருவி என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக மையம் தெரிவித்துள்ளது.

 

04-11-2008, 11.33AM

மோதலில் கொல்லப்பட்ட புலிகளின் 12 சடலங்கள் படையினரால் மீட்பு தே.பா.ஊ மையம் தெரிவிப்பு.
 

வடக்கு முன்னரங்கப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக இடம் பெற்றுவரும் கடுமையான மோதல்களில் கொல்லப்பட்ட 12 புலி உறுப்பினர்களின் சடலங்களை படையினர் மீட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது. இவற்றினை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைத்துள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
இதேவேளை குறித்த 12 சடலங்களையும் ஓமந்தைச் சோதனைச்சாவடி ஊடாக கொண்டு சென்று தாம் புலிகள் அமைப்பிடம் நேற்று (03.11.2008) ஒப்படைத்துள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சரசு விஜயரட்ண தெரிவித்துள்ளார்.

 

04-11-2008, 11.17AM

பாதுகாப்பு நிலைமைகளை ஆராய கடற்படைத் தளபதி வசந்த கருணாகொட யாழ் குடாநாட்டிற்கு விஜயம்.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் வசந்த கருணாகொட நேற்றயதினம் (03.11.2008) யாழ் குடாநாட்டிற்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விஜயத்தின்போது யாழ் மாவட்ட கடற்படைக் கட்டளைத் தளபதி, மாவட்ட இராணுவத் தளபதி மற்றும் பல உயர் அதிகாரிகளைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாகவும், எதிர்காலத்தில் புலிகளின் தாக்குதல்களை முறியடிக்க எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக இதன்போது பேசப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

04-11-2008, 11.00AM

உலக உணவுத்திட்டத்தின் உணவு லொறிகள் வன்னியைச் சென்றடைந்துள்ளன - அமைச்சின் செயலர் ஏ.சி.எம்.ராஷிக்
 

வன்னியில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற உலக உணவுத்திட்டத்தின் 29 லொறிகளும் கிளிநொச்சி மற்றும் முல்;லைத்தீவுப் பகுதிகளை நேற்று (03.10.2008) மாலை சென்றடைந்துள்ளதாக மீள்குடியேற்ற, அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சின் செயலாளர் ஏ.சி.எம்.ராஷிக் தெரிவித்துள்ளார்.
 

29 லொறிகளிலும் 68 மெற்றிக்தொன் அரிசி, 208 மெற்றிக்தொன் கோதுமை மா, 76 மெற்றிக் தொன் பருப்பு, 24 மெற்றித் தொன் சீனி ஆகியன எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சிப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு அரசாங்க அதிபர்கள் ஊடாக இன்று (04.11.2008) வினியோகிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

 

04-11-2008, 10.41AM

நிந்தவூரில் சட்டவிரோத மின்சாரம் பெற்ற 6 பேர் கைது.
 

அம்பாறை நிந்தவூர் பிரதேசத்தில் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்றமைக்காக கைது செய்யப்பட்ட 6 பேர் இன்று (04.10.2008) நீதிமன்றத்தில் ஆயர் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸாரும், மின்சாரசபை அதிகாரிகளும் இணைந்து நேற்று (03.11.2008) மேற்கொண்ட திடீர்த் தேடுதல் நடவடிக்கையின்போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து மின்சாரம் பெறப் பயன்படுத்திய வயர்கள் உள்ளிட்ட பொருட்களை மின்சாரசபை அதிகாரிகள் மீட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

04-11-2008, 10.29AM

மனநோய் வைத்தியர்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அரசாங்க வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
 

இலங்கையில் மனநோய் மருத்துவர்களுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுவதாக அரசாங்க வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது நாடாளாவிய ரீதியில் 20 மனநோய் வைத்தியர்களே உள்ளதாக சங்கத்தின் துணைச் செயலாளர் மருத்துவர் உப்புல் குணசேகர தெரிவித்துள்ளார். இதனால் மனநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் நிலை தோன்றியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் யுத்தம், மற்றும் சுனாமியினால் பலர் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதனை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

04-11-2008, 10.03AM

கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்தின் ஊடாக நிவாரணப் பொருட்கள் வினியோகிக்கப்படும் - பிரணாப் முகர்ஜி.
 

இலங்கையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்காக தமிழக அரசு சேகரித்துவரும் நிவாரணப் பொருட்களை கொழும்பிலுள்ள இந்திய தூதரகம் பொறுப்பேற்று ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஐ.சி.ஆர்.சி ஊடாக வினியோகிக்கும் என இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது.
 

இலங்கைத் தமிழர் நிவாரண நிதியம் எனும் பெயரில் சேகரிக்கப்படும் பொருட்களை எவ்வாறு வினியோகிப்;பது என்பது தொடர்பாக தமிழக முதல்வர் நேற்று (03.11.2008) கருணாநிதி கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போது மத்திய அரசு இதனைத் தெரிவித்துள்ளது. கொழும்பிலுள்ள இந்திய தூதரகம் ஊடாக வன்னி மக்களுக்கு பொருட்களை சென்றடைய வழிவகை செய்யப்படும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப்முகர்ஜி தெரிவித்துள்ளார்.

 

04-11-2008, 9.24AM

புலிகளிடமிருந்து 80 சதவீதப் பகுதியை படையினர் மீட்டுள்ளனர் - இராணுவத் தளபதி சரத்பொன்சேகா.
 

புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து 80 வீதமான பகுதியை இராணுவம் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்திருப்பதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜென்ரல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.
 

அனுராதபுரம் சாலியபுர பகுதியில் அமைந்துள்ள கஜபா படையணியின் 25 ஆண்டு நிறைவையொட்டி நேற்று (03.11.2008) இடம் பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது இதனைத் தெரிவித்துள்ளார். இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள படையினர் கிளாலிப் பகுதியில் முன்னேறிவருகின்றனர். இதனை முழுமையாக மீட்பதற்கு இன்னும் 7 கிலோ மீற்றர் தூரமே உள்ளது. இவை முழுமையாக மீட்கப்பட்டதும் யாழ் குடாநாட்டிற்கும் கொழும்பிற்குமான தரைவழிப்பாதையினை திறக்கமுடியும் எனக்குறிப்பிட்டுள்ளாh;

 

04-11-2008, 9.10AM

தாராபுரம் ஹ_சைன் வீதியில் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை.
 

மன்னார் தாராபுரம் ஹ_சைன் வீதியில் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளினால் குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி ரஞ்சித்குணசேகர தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் (02.11.2008) இரவு 9 மணியளவில் இடம்பெற்ற சம்பவத்தில் தாராபுரம் பகுதியைச் சேர்ந்த ராசு ராமசாமி என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

03-11-2008, 10.02PM

தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண அமைக்கப்பட்ட சர்வ கட்சிக் குழுக் கூட்டம் இன்று நடைபெறுகின்றது.
 

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையை தீர்த்து வைப்பதற்கு ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவினால் அமைக்கப்பட்ட சர்வகட்சிக்குழுவின் கூட்டமொன்று இன்று (03.11.2007) நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தவாரத்தில் பல சர்வகட்சிக்குழுக் கூட்டங்களை நடாத்தவுள்ளதாகவும் இதற்காக அனைத்துக் கட்சிகளின் ஒத்துழைப்பினை பெற முயன்றுள்ளதாகவும் சர்வகட்சிக்குழுவின் தலைவர் பேராசிரியர் அமைச்சர் திஸ்ஸவிதாரண தெரிவித்துள்ளார்.
 

இந்திய தலையீடு அதிகரித்துள்ள இந்த நிலையில் சர்வகட்சிக்குழுவில் 90 வீதமான விடயங்களுக்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் இதில் ஏற்படுத்தப்படும் தீர்வினை அமுல்ப்படுத்த தயாராகவுள்ளதாக ஜனாதிபதி அறிவித்துள்ளமை குழுவின் நடவடிக்கைகளுக்கு மேலும் உறுதியை ஏற்படுத்தியுள்ளதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் இதில் கலந்து கொண்ட ஆர்.யோகராஜன் தெரிவித்துள்ளார். ஒன்று பட்ட இலங்கைக்கு தமிழ், முஸ்லீம் மற்றும் இந்திய வம்சாவளி மக்களின் நலனை முன்னிலைப்படுத்தி சிறந்த தீர்வொன்று காணப்படும் என தாம் நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
 

03-11-2008, 9.55PM

யாழ் வெற்றிலைக்கேணி கட்டைக்காடுப் பகுதியில் விமானத் தாக்குதல் - தே.பா.ஊ மையம் தெரிவிப்பு.
 

யாழ் வெற்றிலைக்கேணி கட்டைக்காடு பகுதியில் அமைந்துள்ள புலிகள் அமைப்பின் கடற்பிரிவு முகாம் மீது இன்று (03.11.2008) மாலை 6 மணியளவில் விமானத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது. ஜெட் விமானங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதல் வெற்றியளித்துள்ளதாக விமானப்படைப் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனகநாணயக்கார தெரிவித்துள்ளார்.

 

03-11-2008, 9.28PM

எரிபொருள் விலையினை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஐ.தே.க
 

கொழும்பில் இன்று (03.11.2008) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் பேச்சளர் கஜந்த கருணாதிலக எண்ணை விலையை குறைப்பது மற்றும் தேயிலைத் தொழிலைப் பாதுகாப்பது தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதற்காக ஐக்கிய தேசியக் கட்சி முன்னின்று உழைப்பதற்கு முடிவெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 

03-11-2008, 9.22PM

இலங்கையை தமது கட்டுப்பாட்டினுள் வைத்திருக்க இந்தியா முயல்கின்றது பிக்கு முன்னணி தெரிவிப்பு.
 

இலங்கையை தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதற்கான சதி நடவடிக்கையினை இந்தியா மேற்கொண்டு வருவதாக தேசிய பௌத்த குருமார் முன்னணி தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று (03.11.2008) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனை முன்னணி தெரிவித்துள்ளது. இதற்காக இந்தியா இலங்கையில் அதிகளவில் முதலீட்டினை செய்து ஆக்கிரமிப்பு நடவடிக்கையினை ஆரம்பித்துள்ளதாக அதன் உறுப்பினர் கலவல்ல சந்திரலோக்க தேரர் தெரிவித்துள்ளார்.

 

03-11-2008, 9.06PM

29 உணவு லொறிகள் இன்று வன்னிக்கு செல்கின்றன.
 

ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத்திட்டத்தின் உணவு லொறிகள் 29 இன்று (03.11.2008) முல்லைத்தீவு, மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 29 லொறிகளிலும் 438 மெற்றித்தொன் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் கொண்டு செல்லப்படவுள்ளதாக உலக உணவுத்திட்டம் தெரிவித்துள்ளது.
 

இதேவேளை வன்னியிலுள்ள மக்களுக்கு எந்தவகையிலான பொருட்கள் தேவையென இந்தியா கோரிக்கை விடுத்திருப்பதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் எஸ்.பி.திவாரட்ண தெரிவித்துள்ளார். கூட்டுவிரிப்புக்கள், சமைப்பதற்கான பாத்திரங்கள், உடுதுணிகள், தற்காலிக கூடாரங்கள், அடங்கிய பொருட்கள் அடங்கிய பட்டியலொன்று ஜனாதிபதி செயலகத்தின் ஊடாக கொழும்பிலுள்ள இலங்கைத் தூதரகத்திற்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
 

03-11-2008, 5.11PM
2600 கிராம சேவையாளர்களுக்கு நியமனம் வழங்கப்படவுள்ளது - அமைச்சர் கருஜெயசூரிய.
 

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 2600 புதிய கிராம சேவையாளர்களுக்கான நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாகம், இவர்களுக்கான நியமனக்கடிதங்கள் எதிர்வரும் 20ம் திகதி சுகததாஸ உள்ளரங்களில் நடைபெறவுள்ள நிகழ்வொன்றில் வைத்து கையளிக்கப்படவுள்ளதாக பொது நிர்வாக அமைச்சர் கருஜெயசூரிய தெரிவித்துள்ளார். கடந்த 2007ம் ஆண்டு முதல் காணப்பட்ட கிராமசேவகர்களுக்கான வெற்றிடங்கள் இதன்மூலம் நிரப்பப்படும் எனத் தெரிவித்துள்ள பொது நிர்வாக சேவைகள் அமைச்சு எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் 3 மாத காலத்திற்கான பயிற்சி இவர்களுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

 

03-11-2008, 4.10PM

லிபியா நாட்டின் தொழிற்பயிற்சி அமைச்சர் கே.ஏ.பாயிஸ்ஸை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
 

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள லிபியா நாட்டின் மனிதவள தொழில்பயிற்சி அமைச்சர் மொஹமட் மூலூப்பிற்கும் கால்நடைவளத்துறை அமைச்சர் கே.எ.பாயிஸ்சிற்கும் இடையில் இன்று (03.11.2008) சந்திப்பொன்று இடம் பெற்றுள்ளது. இதன்போது இலங்கை இளைஞர்களுக்கு எதிர்வரும் காலங்களில் லிபியா மற்றும் மத்திய திரைக்கடலை சூழவுள்ள நாடுகளில் வேலைவாய்ப்புக்கள் பெற்றுக் கொடுப்பது தொடர்பாக பேசப்பட்டதாக கால்நடைத்துறை வள அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

03-11-2008, 3.10PM

காயமடைந்திருந்த த.ம.வி.பு உறுப்பினர்கள் உயிரிழந்தனர்.
 

மட்டக்களப்பு கல்முனை கடற்கரைப் பிரதேசத்தில் நேற்று (02.11.2008) இரவு 9.15 மணியளவில் இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்து மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த இருவர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் த.ம.வி.பு அமைப்பைச் சேர்ந்த மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தனர். மேற்படி சம்பவத்தில் அந்த அமைப்பைச் சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.

 

03-11-2008, 2.29PM

கந்தானை முத்துராஜவனப் பகுதியில் சடலம் மீட்பு.
 

கந்தானை முத்துராஜவனப் பகுதியில் நேற்று (02.11.2008) இரவு சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக கந்தானைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 35 வயதுடைய இந்தச் சடலம் அடையாளம் காண்பதற்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 

03-11-2008, 2.20PM

தமிழகத்தில் சேகரிக்கப்படும் நிதி புலிகளைச் சென்று சேர்ந்துவிடுமோ என்ற சந்தேகத்தினை தோற்றுவித்துள்ளது
 

இலங்கைத் தமிழர் நிவாரண நிதியம் என்ற போர்வையில் தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி சேகரிக்கும் நிதி புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைக்கு சென்று சேர்ந்துவிடுமோ என்ற சந்தேகத்தினை தோற்றுவித்துள்ளதாக தமிழக முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஜெயராம் தெரிவித்துள்ளார்.
 

அப்பாவித் தமிழ் மக்களை மனிதக் கேடயமாக பயன்படுத்திக் கொண்டு பயங்கரவாத செயல்களை நடாத்திக் கொண்டிருக்கும் இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கத்தின் முக்கியஸ்தர் தமிழ்செல்வனின் மறைவிற்கு இரங்கல்பால் எழுதியவர் கருணாநிதி என்பதனால் இந்தச் சந்தேகம் வலுப்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைத் தமிழர்களுக்காக கருணாநிதி என்ன செய்தார்? கருணாநிதி தாங்கிப்பிடித்துக் கொண்டிருக்கும் மத்திய அரசு என்ன செய்தது? இதையெல்லாம் மறந்துவிட்டு வழக்கம்போல் உண்டியல் குலுக்க ஆரம்பித்துவிட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இலங்கைத் தமிழர் நிவாரண நிதியத்தினால் திரட்டப்படும் யாரால் எங்கே சென்று சேரப்போகின்றதோ! என ஐயம் வெளியிட்டுள்ள அவர் இதற்குள் தமிழக மக்கள் யாரும் சிக்கிக்கொள்ளவேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.

 

03-11-2008, 10.31AM

அரசின் நிவாரண நடவடிக்கைகள் தொடர்பாக இந்திய தூதுவருக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
 

வன்னிப் பகுதி மக்களுக்காக அரசாங்கம் மேற்கொண்டுவரும் நிவாரண நடவடிக்கைகள் தொடர்பாக இந்திய தூதுவருக்கு விளக்கமளிப்பதற்கான கலந்துரையாடல் ஒன்று கடந்த 31ம் திகதி நடைபெற்று முடிந்துள்ளதாக வெளியுறவுத்துறைச் செயலர் பாலித கொஹன்ன தெரிவித்துள்ளார்.

 

வன்னிப் பகுதிக்கு எவ்வாறான உணவுப் பொருட்கள் அனுப்பப்படுகின்றன. இன்னும் அனுப்பப்படவிருக்கின்றன என்பன குறித்து இந்திய தூதுவர் அலோக் பிரசாத்திற்கு தெரியப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவிலிருந்து கிடைக்கப்பெறும் 800 மெற்றித் தொன் நிவாரணப் பொருட்களை உயரியமுறையில் விநியோகிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், அரச அதிபர்கள் ஊடாகவே நிவாரணப் பொருட்கள் தற்போது விநியோகிக்கப்படுகின்றன. எனவே அதே நடைமுறை இந்தியா வழங்கும் பொருட்களை விநியோகிக்கும்போதும் கடைப்பிடிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

 

03-11-2008, 9.29AM

மட்டு. கல்முனையில் த.வி.பு.உ மூவர் சுட்டுக்கொலை.
 

மட்டக்களப்பு கல்முனைக் கடற்கரைப் பகுதியில் நேற்று (02.11.2008) இரவு 9.15 மணியளவில் இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்றில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த 3 உறுப்பினர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி ரஞ்சித்குணசேகர தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தில் அந்த அமைப்பைச் சேர்ந்த மேலும் இருவர் காயமடைந்து மட்டக்கப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

03-11-2008, 09.11AM

30 ஆயிரம் மெற்றித்தொன் அரிசி இறக்குமதி செய்ய ஏற்பாடு
 

கொழும்பில் நேற்று (02.11.2008) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துலகுணவர்த்தன நாட்டில் ஏற்பட்டுள்ள அரிசிக்கான தட்டுப்பாட்டை நீக்குவதற்கு 30 ஆயிரம் மெற்றித் தொன் அரிசியினை இறக்குமதி செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். நாட்டில் அரிசி விற்பனை செய்யும் வியாபாரிகள் சிலர் செயற்கையாக விலை உயர்வை ஏற்படுத்துவதாக குறிப்பிட்ட அவர் அதிக விலைகளில் அரிசியினை விற்பனை செய்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 

03-11-2008, 9.01AM

வாழைச்சேனை பிரம்படித்தீவில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் மீது சூடு.
 

மட்டக்களப்பு வாழைச்சேனை பிரம்படித்தீவு பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். வாழைச்சேனை கிண்ணையடி பிரதேசத்தைச் சேர்ந்த செல்லத்தம்பி வாசுதேவன் (வயது 22) என்பவரே காயமடைந்துள்ளார். காயமடைந்த நிலையில் வாழைச்சேனை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 

02-11-2008, 3.40PM

லிபியா நாட்டின் வேலைவாய்ப்பு அமைச்சர் மொகமட் மூலூப் இலங்கை வந்துள்ளார்.
 

லிபியா நாட்டின் வேலைவாய்ப்பு அமைச்சர் மொகமட் மூலூப் உள்ளிட்ட குழு ஒன்று நேற்று (01.11.2008) இரவு 11.10 மணியளவில் இலங்கை வந்தடைந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு அலுவலகம் தெரிவித்துள்ளது. யு.எல்.எவ்.196 விமானத்தின் மூலம் இவர்கள் அனைவரும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தினை வந்திறங்கியுள்ளதாகவும், இவர்கள் இலங்கையின் முக்கிய அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

02-11-2008, 1.59PM

(2ம் இணைப்பு)
இராணுவத்தினர் அழைத்தபோது ஒருவர் சயனைட் உட்கொண்டு சாவு, தப்பியோடிய மற்றொருவர் சுடப்பட்டார்.

 





படங்கள் :- இலங்கை இராணுவ இணையத்தளம்


யாழ்ப்பாணம் அரியாலை முள்ளிப் பகுதியில் நேற்று (01.11.2008) பிற்பகல் இடம்பெற்ற சம்பவமொன்றில் புலிகள் இயக்க்தை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர். ரோந்து சென்ற இராணுவத்தினர் சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்துகொண்ட இரு இளைஞர்களை இராணுவத்தினர் அழைத்தபோது ஒருவர் சயனைட் உட்கொணடு உயிரை மாய்த்துக்கொண்டார். தப்பியோடிய மற்றொருவர் இராணுவத்தினரால் சுடப்பட்டுள்ளார். சம்பவத்தில் கொல்லப்பட்ட இருவரிடமும் யாழ் பல்கலைக்கழக மாணவர்களது அடையாள அட்டைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவர்களிடமிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ள அடையாள அட்டைகள் மூலம் ஒருவர் கைதடி வடக்கை சேர்ந்த செல்லத்துரை புருசோத்தமன் (வயது 25) எனவும் தப்பியோடி சுடப்பட்டவர் ஆழியவளையை சேர்ந்த சிவஞானலிங்கம் வரணாதித்தன் (வயது 25) எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சயனையிட் உட்கொண்டவரிடமிருந்து யாழ் பல்கலைக்கழக கலை பீட மாணவனுக்குரிய அடையாள அட்டையும், தப்பியோடி சுடப்பட்ட சிவஞானலிங்கம் வரனாதித்தனிடம் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட மாணவனுக்குரிய அடையாள அட்டையும் கண்டெடுக்கப்பட்டது. இவரிடமிருந்து 9 மி.மீ மைக்ரோ பிஸ்டல் ஒ;னறையும் மீட்டுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். சம்பவத்தினை அடுத்து யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் இணைந்து பாரிய தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டதாக தெரியவருகின்றது

 

.02-11-2008, 11.02AM

புலிகளின் இலக்குகள் மீது ஜெட் விமானங்கள் தாக்குதல்.
 

இரணைமடுப் பகுதியிலிருந்து 2.5 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்திருந்த புலிகளின் பயிற்சி முகாம் மற்றும் ஆயுதக்களஞ்சியசாலை ஆகியவற்றின் மீது இன்று (02.11.2008) காலை 7 மணியளவில் ஜெட் விமானங்கள் தாக்குதல் நடாத்தியுள்ளன. இத்தாக்குதலின்போது குறித்த இலக்குகள் இரண்டும் முற்றாக அழிவடைந்துள்ளதாக விமானப்படைப் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனகநாணயக்கார தெரிவித்துள்ளார்.

 

02-11-2008, 10.47AM

சர்வகட்சிக்குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு த.தே.கூ, ஜேவிபி ஆகியவற்றிக்கு மீண்டும் அழைப்பு.
 

தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி என்பனவற்றினை சர்வகட்சிக்குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு மீண்டும் அழைப்பு விடுக்கப் போவதாக அதன் தலைவர் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸவிதாரண தெரிவித்துள்ளார். ஐ.தே.கவின் சார்ப்பில் அதன் பாராளுமன்ற உறுப்பினர் கே.என்.சொக்ஸியுடன் பேச்சு வார்த்தை நடாத்தியிருப்பதாக தொவித்துள்ள அவர் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண அனைவரும் பேதங்களை மறந்து மாநாட்டில் கலந்து கொள்ளவேண்டியது அவசியம் எனக்குறிப்பிட்டுள்ளார்.

 

02-11-2008, 10.32AM

மட்டு. ஆயித்தியமலையில் கிளைமோர் தாக்குதல்.

மட்டு ஆயித்தியமலை பகுதியில் வீதிச்சோதனை நடவடிக்கையிலீடுபட்டிருந்த விசேட அதிரடிப்படையினரை இலக்கு வைத்து புலிகள் கிளைமோர் தாக்குதல் நடாத்தியிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி ரஞ்சித்குணசேகர தெரிவித்துள்ளார். நேற்று (01.11.2008) காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் இதில் எவ்வித சேதங்களும் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

02-11-2008, 9.01AM

யாழ் பல்கலைக்கழக மாணவன் சையினட் அருந்தி மரணமாகியுள்ளதாக யாழ் பொலிஸார் தெரிவிப்பு.
 

யாழ் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் நேற்று (01.11.2008) பிற்பகல் சையினட் அருந்தி உயிரிழந்துள்ளதாக யாழ் பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் கைதடிப் பகுதியைச் சேர்ந்த 25 வயதான செல்வராஜா புருசோத்தமன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் அரியாலை முல்லி பகுதியில் உள்ள பற்றைக்காட்டில் மறைந்திருந்த இருவர் மீது படையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகவும் இதில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றயநபரான குறித்த பல்கலைக்கழக மாணவன் சையினட் அருந்தி மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தினை அடுத்து பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் இணைந்து நேற்று மாலை பல்கலைக்கழகத்தினுள் தேடுதல் நடாத்தியதாக தெரியவருகின்றது.

 

01-11-2008, 11.52PM

யாழ் வடமராட்சி கடற்பரப்பில் மோதல், 14 புலிகள் உயிரிழந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவிப்பு.

யாழ்ப்பாணம் வடமராட்சி கடற்பரப்பில் புலிகளுக்கும் கடற்படையினருக்கும் இடையில் இன்று (01.11.2008) அதிகாலை மோதல் இடம் பெற்றுள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது. இந்த மோதலில் புலிகளின் முக்கிய ஐந்து உறுப்பினர்கள் உட்பட 14 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், புலிகளின் 4 படகுகள் அழிவடைந்துள்ளதாகவும் மையம் குறிப்பிட்டுள்ளது. மேலும் இந்த மோதலி;ல் 5 கடற்படையினர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் டி.பி.கே.தஸநாயக்க தெரிவித்துள்ளார். மோதலின்போது தப்பிச் சென்ற புலிகளின் படகு இரண்டினை செம்பியன்பற்று கடற்பரப்பில் வைத்து விமானப்படையினர் தாக்குதல் நடாத்தியழித்துள்ளதாகவும் இதன்போது 3 புலி உறுப்பினர்கள் உயிரிழந்ததாகவும் விமானப்படைப் பேச்சாளர் விங்கமாண்டர் ஜனகநாயக்கார தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த தாக்குதலில் கடற்படையினருக்கு பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன் தமது தரப்பில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக விடுதலைப் புலிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

01-11-2008, 11.45PM
இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வைக்காண வலியுறுத்தி தமிழகத்தில் உண்ணாவிரதப் போராட்டம்

போரினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழ் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து தமிழ் திரைப்படத்துறையினர் நடாத்திய உண்ணாவிரதப் போராட்டம் இன்று (01.11.2008) மாலை 4 மணியளவில் முடிவடைந்துள்ளது. இதில் பிரபல நடிகர்கள் ரஜனி, கமல், விஜய், அஜித் உட்பட்ட நடிகைகள் பலரும் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் கறுப்பு சட்டை அணிந்த நிலையில் காணப்பட்டதாக தெரியவருகின்றது. இலங்கைத் தமிழ் மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவேண்டும், இந்திய மத்திய அரசாங்கம் இலங்கையின் இனப்பிரச்சினையில் தலையிட்டு தீர்வினைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் போன்ற கோரிக்கைகள் இதன்போது வலிறுத்தப்பட்டுள்ளது. மேலும் தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதியினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர் நிவாரண நிதியத்திற்கு போராட்டத்தில் கலந்து கொண்ட நடிகை, நடிகர்களினால் 45 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

01-11-2008, 11.37PM
புலிகளின் ஊடுருவலைத் தடுப்பதற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது இந்திய கடற்படைத் தளபதி.

புலிகள் தமிழ் நாட்டிற்குள் ஊடுருவுவதனைத் தடுப்பதற்காக இந்திய கடலோரப் பிரதேசங்களின் பாதுகாப்பினை பலப்படுத்தியுள்ளதாக இந்திய கடற்படைத் தளபதி சிங்கொட் தெரிவித்துள்ளார். அகதிகள் என்ற போர்வையில் புலிகள் ஊடுருவக் கூடும் என்பதனால் மத்திய புலனாய்வுத்துறை தீவிர கண்காணிப்பினை செலுத்திவருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை இராணுவத்தின் தாக்குதலில் காயமடையும் புலி உறுப்பினர்கள் சிகிச்சை பெறுவதற்காக தமிழகம் வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் இதனையடுத்து இந்த பாதுகாப்பு அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். கடற்படையினருடன் பொலிஸாரும் இணைந்து ரோந்து பணியினை மேற்கொள்வர் என்றும் இந்திய கடற்படைக்கு சொந்தமான ஹெலிகளும் கடற்பிரதேசத்தில் ரோந்தினை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

01-11-2008, 11.31PM

யாழ் குடாநாட்டு மக்களுக்கு வேண்டிய அத்தியாவசிய தேவைகள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.

யாழ் குடாநாட்டு மக்களுக்கான அத்தியாவசிய தேவைகள் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டமொன்று நேற்றயதினம் (31.10.2008) காங்கேசன்துறையில் இடம்பெற்றுள்ளது. குடாநாட்டு மக்களுக்கான 24 மணி நேர மின்விநியோகம், போக்குவரத்து விஸ்தரிப்பு, மற்றும் மீன்பிடித்துறை சம்பந்தமாக ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இக்கூட்டத்தில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கணேஸ், யாழ் இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜென்ரல் ஜி.ஏ.சந்திரசிறி, பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

01-11-2008, 11.24PM
சோனியாகாந்திக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல் விடுத்த இளைஞனை தமிழகப் பொலிஸார் கைது செய்துள்ளனர். கேரளா மாநிலம் கொச்சியைச் சேர்ந்தவரே கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

01-11-2008, 11.20PM

ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ இந்தியா செல்லவுள்ளார்.

டெல்லியில் நடைபெறவுள்ள வின்சன் எனப்படும் வங்காள விரிகுடா நாடுகளின் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ இம்மாதம் நடுப்பகுதியில் இந்தியாவிற்கு செல்லவுள்ளதாக இந்தியன் எக்பிரஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. எதிர்வரும் 13ம் திகதி இம்மாநாடு ஆரம்பமாவுள்ளதாக தெரிவித்துள்ள இந்தியன் எக்ஸ்பிரஸ் இதில் கலந்து கொள்ள இந்தியா வரும் ஜனாதிபதி இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து இரு நாடுகளினதும் உறவுகள் தொடர்பாக கலந்துரையாடுவார் எனத் தெரிவித்துள்ளது.

01-11-2008, 12.11PM

ஷெல், லாப் காஸ் சிலிண்டர்களின் விலை குறைப்பு.

சமையலுக்கு பயன்படுத்தப்படும் 12.5 கிலோ கிராம் ஷெல் காஸ் சிலிண்டரின் விலை 78 ரூபாவினாலும், லாப் காஸ் சிலிண்டரின் விலை 178 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளன. இதன்படி 1863 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட 12.5 கிலோக்கிராம் நிறையுடைய செஷ் காஸ் சிலிண்டரின் விலை 1785 ரூபாவாகவும், 343 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட 2.3 கிலோக்கிராம் நிறையுடைய சிறிய சிலிண்டரின் விலை 328 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் லாப் காஸ் நிறுவனத்தின் நிதிப் பணிப்பாளர் ரிமோயிசல்டின் தெரிவித்துள்ளார்.
இதேபோன்று 1857 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட லாப் காஸ் சிலிண்டரின் விலை 1679 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளதாககவும் இவ்விலை குறைப்பு இன்று (01.11.2008) முதல் அமுலுக்கு வரும் என லாப்காஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் பிரகாஸ் கனகராஜா தெரிவித்துள்ளார்.

01-11-2008, 10.07AM

படிப்பதற்கு வழங்கிய புத்தகத்தினுள் புலிகள் குண்டு பொருத்துகின்றனர் - அனுரபிரியதர்சன யாப்பா.

எதிர்காலத்தில் புலிகளின் பூச்சிகொல்லி விமானங்களை அழிப்பதற்கு வேண்டிய தந்திரோபாயங்களை அரசாங்கம் மேற்கொண்டுவருவதாக ஊடகத்துறை அமைச்சர் அனுரபிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (31.10.2008) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத்தினை ஒழிப்பதற்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்கவேண்டும் அதைவிடுத்து கோப்பிக்கடை பேச்சுவார்த்தைகளுக்கெல்லாம் அரசாங்கம் பதிலளிக்காது எனத் தெரிவித்துள்ள அவர் புலிகள் பயன்படுத்தும் விமானம் உலகில் பூச்சி கொல்லி மருந்துகளை தெளிப்பதற்காக பயன்படுத்துபவை எனத் தெரிவித்துள்ளார். அவ்வாறான ஒரு விமானத்தினை ஏற்கனவே விமானப்படையினர் தாக்கியழித்துள்ளனர். எதிரியின் தந்திரோபாயங்களை எதிர்பார்த்திருக்க முடியாது என்பதனால்தான் படிப்பதற்காக வழங்கப்பட்ட புத்தங்களுக்குள் புலிகள் குண்டுகளைப் பொருத்துகின்றனர். இந்த நிலையில்தான் புலிகளின் விமானங்களை தாக்கியழிப்பதற்கான தந்திரோபாயங்களை பாதுகாப்பு தரப்பினர் கையாண்டு வருகின்றனர் இதில் அரசாங்கத்திற்கு நம்பிக்கையிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

01.11.2008, 9.21AM

நுவரெலியா லோசன்வீதியில் ரி56 ரக துப்பாக்கி மீட்பு.

நுவரெலியா லோசன்வீதியில் அமைந்துள்ள இலங்கை வங்கிக் கட்டடத்திற்கு அருகாமையிலிருந்து ரி56 ரகத் துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் எனபன நேற்று (31.10.2008) காலை 6.30 மணியளவில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உரப்பை ஒன்றில் சுற்றப்பட்ட நிலையில் இவை மீட்கப்பட்டதாகவும் இதனையடுத்து குறித்த வீதியூடான போக்குவரத்து தேடுதலுக்காக மூடப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.

01-11-2008, 9.02AM
நீர்கொழும்பில் இளைஞர் கடத்தப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு குடாப்பாடு பகுதியில் இளைஞர் ஒருவர் கடந்த 28ம் திகதி அடையாளம் தெரியாத ஆயுததாரிகளினால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். நீர்கொழும்பு கனத்தைவீதி குடாப்பாடு பிரதேசத்தைச் சேர்ந்த புலேந்திரன் ரெக்ஷன் (வயது 21) என்பவரே கடத்தப்பட்டுள்ளார். இலக்கத் தகடு அற்ற வெள்ளைவானில் வந்த ஆயுததாரிகள் வீட்டிலிருந்த இவரைக் கடத்திச் சென்றுள்ளதாக உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

 

 

 

அங்கீகரிக்கப்பட்ட
அரசியல் கட்சிகள்

 

தேர்தல் திணைக்களத்தால்

03 ஜுலை 2008 இல் வெளியிடப்பட்டது

 

 

 

 

அவுஸ்;திரேலியாவில வெளிவரும் உதயம் மாத இதழில் வடக்கு கிழக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் தோழர் அ.வரதராஜப்பெருமாள் அவர்கள் எழுதிய 13வது அரசியல் யாப்பு திருத்தம், அதன் அமுலாக்கம் குறித்த கட்டுரை தொடர்
 

 

கூட்டமைப்பு

 

01 ஆகஸ்ட் 2008
த.வி.கூ புளொட்

பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப்
 


அறிக்கைகள்

 

01 மே 2007
ஈ.பி.ஆர்.எல்.எவ்

 


கட்சியின் விளக்கம்

 

10 நவம்பர் 2006
இனப்பிரச்சினைக்கான அரசியற் தீர்வு தொடர்பாக எமது கட்சியின் விளக்கம்
 

இணைத்தலைமை
 

22 நவம்பர் 2006
 


ஜெனீவா பேச்சுவார்த்தை
 


மத நிறுவனங்கள்

 

08 ஏப்ரல் 2007
 


 

இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் பிரேரணைகள்
 

Proposal for the Political Solution to the Ethnic Conflict in Srilanka
EPRLF seeks merger of Sri Lanka's north-east Indo-Asian News Service 30 March 2007

Indian backing proposals styled on the Indo-Lanka Accord The Island, March 26, 2007  

Moderate Tamils' constitutional proposal  Hindustan Times 23 March 2007

FRATERNAL PAGE

LSSP demands 13th Amendment be implemented
 

 

தோழர் றொபேட்
50வது பிறந்தநாள் நினைவு
 

மார்கழி 13
ஈபிஆர்எல்எவ் மீது தாக்குதல்
khh;fop 13

<gpMh;vy;vt; kPJ jhf;Fjy;

 

Appeal to the leaders of  Political Parties and the People of  Tamil Naad 14 October 2008

 

 

 

மட்டக்களப்பு மாவட்ட உள்ள+ராட்சி தேர்தல்கள்- 2008
 

வாக்களிப்பு மற்றும் கட்சிகளுக்குக் கிடைத்த ஆசனங்கள்
 

மட்டக்களப்பு மாநகர மேயர் பத்மினி 13.03.2008 அன்று அளித்த செவ்வி
 

 

கிழக்கு மாகாணசபை தேர்தல் ஈபிஆர்எல்எவ் கட்சியின் பொதுச் செயலாளர் ஸ்ரீதரன் வழங்கிய (14.03.2008) செவ்வி

 

 

 
     
 

 'ehk; kf;fSf;fhfg; NghuhLtnjd;gJ vk;kPJ Rkj;jg;gl;l flikNa jtpu vkf;F toq;fg;gl;l mjpfhuky;y"  Njhoh; f.gj;kehgh